வெள்ளி, 8 ஜூன், 2018

42 முதலிரவில் சுய முன்னேற்ற வகுப்பு!

இரண்டு பெண்கள் தங்கள் முதலிரவில் கணவனுக்கு சுயமுன்னேற்ற வகுப்பு எடுத்திருக்கிறார்கள் (திரைப்படத்தில்தான்)!

ஒருத்தி கிராமத்துப் பெண். படிப்பறிவு இல்லாதவள். அனாதையாக வளர்ந்தவள். அவள் கணவன் விபத்தில் ஒரு கை ஊனமடைந்தவன். தன் அன்னை அவளுக்கு அடைக்கலம் கொடுத்தாள் என்ற நன்றிக்காகவே தன்னை அவள் திருமணம் செய்து கொண்டாளோ என்று நினைக்கும் அவள் கணவன், கை ஊனமான தான் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க முடியுமா என்று நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்போது  அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அவள் பாடுகிறாள்.

படிக்காத கிராமத்துப் பெண் என்பதால் எளிய உதாரணங்களைச் சொல்லி அவனுக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்.

பல்லவி
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

'உன் மீது பரிதாபப்பட்டு நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. நீ தங்கமானவன் (உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவன்) என்பதால்தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன்' என்பதை அவனைத் தங்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் வெளிப்படுத்துகிறாள்.

உன் உடல் ஊனம் நீ என் மீது அன்பு செலுத்தத் தடையாக இருக்கப் போவதில்லையே!  (உன்னிடம் நான் எதிர்பார்ப்பது உன் அன்பு ஒன்றைத்தான் என்பதைத் தெளிவு படுத்துகிறாள்.)

சரணம் 1
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?

சிங்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அவனுடைய வீரத்தையும், பலத்தையும் அவனுக்கு நினைவு படுத்துகிறாள்.  சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் சொல்வது போல் எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் செயல்களும் சிறப்பாக இருக்கும் என்ற செய்தியையும் சொல்கிறாள்.

சரணம் 2
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா?
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா?

இது முதல் இரவு என்பதை அவனுக்கு நினைவூட்டும் வகையில் இந்த வரிகள் அமைந்திருக்கின்றன. உடல் ஊனம் காதலுக்குத் தடையாக இருக்காது என்பதை உணர்த்துகிறாள்.

சரணம் 3
காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன்
உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர்
வாழ்வின் சுவை கூறுவேன்.

எல்லாம் சரிதான். ஆனால் காலம் (விதி) நமக்குச் சாதகமாக இல்லாவிட்டால் என்ன செய்வது? அப்படி நேர்ந்தால், ஒரு மனைவியாக உனக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டு ஒரு நல்ல மனைவியாக இருப்பேன். எந்த நிலையிலும் மானத்தோடு வாழ்ந்து ஒரு நல்ல குலப் பெண்மணியாக வாழ்வேன்.

இங்கே பண்பாட்டுப்படி வாழும் ஒரு மனைவியாகப் பேசுகிறாள்.

இன்னொரு விதத்தில் பார்த்தால், முதல் இரண்டு சரணங்களில் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவள், மூன்றாவது சரணத்தில் தான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறாள்.

பாடலின் சுருக்கம் இது:

பல்லவி: நீ தங்கமானவன் அல்லவா!

சரணம் 1: நீ ஒரு பலம் பொருந்திய ஆண்மகன்

சரணம் 2: ஒரு காதலனாக (கணவனாக) நடந்து கொள்

சரணம் 3: ஒரு மனைவியின் கடமை எது என்பதை நான் அறிவேன். அதை நிறைவேறுவேன்.

எத்தனை அழகாக, பொருத்தமாக பாடலை அமைத்திருக்கிறார் கவிஞர்!

1959ஆம் ஆண்டு பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் வெளியான 'பாகப் பிரிவினை ' படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

பாடல் வரிகளின் எளிமைக்கு ஏற்ப இசையும் எளிமையாக அமைந்திருக்கிறது. எளிமை என்றால் அலங்காரங்கள் அதிகம் இல்லாத, இனிமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மிகக் குறைந்த இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி அமைக்கப்பட்ட  மென்மையான இசை. அடக்கமான பட்டிக்காட்டுப் பெண்ணைப் போல் இசையும் அடக்கமாக வந்து நம்மை ஆட்கொள்கிறது.

சிறுவயதிலேயே என்னை மிகவும் ஈர்த்த ஒரு பாடல் இது. 'டிண்ட்டி டிண்ட்டின்' என்ற ஆரம்ப இசையைக் கேட்டதுமே மனம் ஒரு அற்புதமான சுக உணர்வை அனுபவிக்கத் தயாராகி விடும்.

பாடல் இதோ:

..
ன்னொரு பெண் ஒரு அரசனை மணந்தவன். அவளும் அரச குலத்தைச் சேர்ந்தவள்தான். அவள் கணவன் ஒரு வீரன். கொடை வள்ளல். ஆயினும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்று கருதப்பட்டு அதனால் பல அவமானங்களைச் சந்தித்தவன்.

இந்தப் பெண்ணும் தன் கணவனுக்கு நம்பிக்கையூட்டும் வரிகளைப்  பாடுகிறாள்.

ஆனால் இங்கு கணவன், மனைவி இருவருமே அறிவிலும், கல்வியிலும் சிறந்தவர்கள் என்பதால், இங்கே மனைவியின் 'உரை' சற்று உயர் நிலையில் இருக்கிறது. உதாரணங்கள், தத்துவங்கள் எல்லாமே அறிவு சார்ந்தும், ஆழமாகவும் உள்ளன.

பாடல் வரிகளைப் பார்ப்போம்:

பல்லவி 
கண்ணுக்குக் குலமேது, கண்ணா!
கருணைக்கு இனமேது?
விண்ணுக்குள் பிரிவேது, கண்ணா!
விளக்குக்கு இருளேது?

சரணம் 1
பாலினில் இருந்தே நெய் பிறக்கும், கண்ணா!
பரம் பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் - அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்?

சரணம் 2
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே!

'தருமத்தின் தாயே கலங்காதே!' என்ற கடைசி வரி சுவாரசியமானது. இதற்குப் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம்.
1) கர்ணனை 'தர்மத்தின் தாயே!' என்று விளித்து 'நீ' கலங்காதே' என்று சொல்வதாகப் பொருள் கொள்ளலாம். ('தர்மத்தின் தாய்' கடவுள் போன்றவர் என்பதால், ஆணான கர்ணனை இப்படி விளிப்பதில் தவறில்லை.

2) கர்ணன் சோர்வுற்றிருப்பதைக் கண்டு தர்மத்தின் தாய் (அறக்கடவுள்) கலக்கமுற்றிருக்கிறாள். அதனால் அறக்கடவுளிடம், "தர்மத்தின் தாயே! கர்ணனின் சோர்வை நான் போக்கி விட்டேன். நீ இனிமேல் கலங்க வேண்டாம்" என்று சொல்கிறாள் என்று பொருள் கொள்ளலாம்.

3) தமிழில் தர்மம் செய்வது என்பது கொடையைக் குறிக்கும். எனவே தர்மத்தின் தாய் என்பவள்  'கொடைக்கான கடவுள்' என்று கொண்டால், "கொடையின் கடவுளே! கர்ணன் சோர்வுற்று விட்டதால் அவனுடைய கொடை நின்று விடுமோ என்று நீ கலங்க வேண்டாம். நான் அவனுடைய சோர்வைப் போக்கி விட்டேன். அவன் எப்போதும் போல் தர்மம் செய்து கொண்டுதான் இருப்பான்" என்று சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.

1964ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ணன்' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கும் இசை விஸ்வநாதன்-ராமமூர்த்திதான்.

அரசனின் முதல் இரவு என்பதாலும், கவிஞரின் கம்பீரமான, உயர்ந்த சிந்தனைகளைத் தாங்கிய ஆழமான வரிகளுக்கு ஏற்பவும்,  இசையமைப்பு ராஜகம்பீரத்துடன் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் richness என்று சொல்லலாம். 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலில் இருந்த எளிமையான அழகுக்கு மாறுபட்ட அலங்காரம் செறிந்த அழகு!

அற்புதமான டியூன், அழுத்தமான சங்கதிகள் (வார்த்தைக்கு வார்த்தை சங்கதி!) காயப்பட்ட மனத்தை வருடிக் கொடுப்பது போன்ற ஹம்மிங், பிரமிக்க வைக்கும் பின்னணி இசை என்று மட்டும்தான் என் போன்ற பாமரனால் இந்தப் பாடலின் இசையை வர்ணிக்க முடியும். இசைக்குழுக்களால் பெரும்பாலும் இந்தப் பாடலின் பின்னணி இசையைப் பாதி அளவுக்கு கூட வாசிக்க முடிவதில்லை என்பதே இந்தப் பின்னணி இசையின் நுணுக்கமான அமைப்புக்குச் சான்று.

ஆறுதல் சொல்வது போல் அமைந்த பாடல் மெதுவான கதியில் செல்கிறது (slow pace).பின்னணி இசை வேகமான கதியில் துள்ளிக் குதித்து ஓடுகிறது - சோர்வடைந்த மனத்துக்கு உற்சாகமூட்டுவது போல். இது போன்ற வேறுபாடுகள் (contrasts) எம் எஸ் வி பார்த்துப் பார்த்துச் (consciously) செய்கிற விஷயங்கள் என்பது அவரது வேறு சில பாடல்களிலும்   நிரூபணமாகியிருக்கிறது.

பாடல் இதோ:


நன்றி!


.

ஞாயிறு, 20 மே, 2018

41. நான் வாழ்க!

கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் முதலிரவுப் பாடல்கள் எத்தனையோ உண்டு.  ஒவ்வொரு பாடலிலும் புதிதாக எதைச் சொல்வது என்பது கவிஞருக்கு ஒரு சவால்தான்.

1965ஆம் ஆண்டு வெளியான 'ஆனந்தி' படத்தில் இடம் பெற்ற 'உன்னை அடைந்த மனம் வாழ்க' என்ற பாடலில் கவிஞர் ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை எனினும், பாடல் வரிகளின் பொருளைக் கொண்டு இது ஒரு முதலிரவுப் பாடல் என்று தீர்மானிக்கலாம்.

இங்கே நாயகி முதலில் தன்னை வாழ்த்திப் பாடுகிறாள். தனது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திக் கொள்கிறாள். பிறகு கணவனிடம் சில கோரிக்கைகளை வைக்கிறாள். (In fact she makes quite a few  demands of her husband)

பல்லவி
உன்னை அடைந்த மனம் வாழ்க - இனி
ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் உன் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க!

'உன்னை அடைந்த மனம் வாழ்க' - அதாவது என் மனம் வாழ்க அல்லது நான் வாழ்க! ஒருவர் தன்னைத் தானே வாழ்த்திப் பாடிக் கொள்கிற பாட்டு இது ஒன்றாகத்தான் இருக்கும்! 'உன்னை' என்று ஆரம்பித்து இன்னொருவரை (கணவனை) வாழ்த்துவது போல் போக்குக்காட்டி, எவ்வளவு சாமர்த்தியமாகத் தன்னையே  வாழ்த்திக் கொள்கிறாள்!

'இனி ஒவ்வொரு இரவும் வாழ்க' -  ஒரு நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருந்தோமா  இல்லையா என்ற சிந்தனை அன்று இரவுதானே  நமக்கு வரும்? ஒவ்வொரு இரவும் வாழ்க என்று இரவை வாழ்த்துவது போல், ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மீண்டும் தன்னை வாழ்த்திக் கொள்கிறாள் இந்த நாயகி.

சரணம் 1
சிறு  மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னைத் தஞ்சம் என்று வந்தாள்  உன்னுடன் மகிழ,
நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா காத்தருள் புரிக
தினம் உன்னால் என் சுகம் வளர்க
இனி என்னால் உன் நிலை உயர்க

சரணத்தில் கவிஞர் அடுக்கடுக்காக வார்த்தைகளை அள்ளி வீச, மெல்லிசை மன்னர் சளைக்காமல் அனாயசமாக அத்தனை வார்த்தைகளையும் தன் ட்யூனுக்குள் அடக்கியிருக்கிறார். சுசீலாவுக்குத்தான் சற்று அதிகம் பயிற்சி தேவையாயிருந்திருக்கும்!

பொருள்:
நான் உன்னைத் தஞ்சம் என்று வந்திருக்கிறேன்
அஞ்சி அஞ்சி நடக்கும் என் நெஞ்சில் வஞ்சம் இல்லை
உன்னால் நான் சுகமடைய வேண்டும் (என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது உன் பொறுப்பு!)
நான் வந்து விட்டேன் இல்லையா? இனிமேல் உனக்கு யோகம்தான்!

சரணம் 2
எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று
தந்தார் தன் மனம் கனிய
இந்தப் பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம்
தன்னால் காத்தருள் புரிக
குறை இல்லாத வாழ்வொன்று அருள்க
துணை என்னோடு நீ கொள்ள வருக

பொருள்:
என் அப்பா ஒரு குழந்தையை ஒப்படைப்பது போல் என்னை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்.
ஆனால் உன் அம்மாவை எப்படிப் பார்த்துக் கொள்வாயோ, அப்படி நீ என்னைப்  பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீ எனக்கு எந்தக் குறையையும் வைக்கக் கூடாது.

கடைசி வரி 'துணை என்னோடு நீ கொள்ள வருக' என்று இருக்கிறது. 'நான் மேலே சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு என்னை உன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்' என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

'துணை என்னோடு நீ கொள்ள வருக' என்பதற்கு 'நம் முதலிரவைத் துவங்கலாம்' என்று நாசூக்காகச் சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்!

இரண்டாவது சரணத்தின் இறுதியில் வரும் ஹம்மிங் நாயகி தன் முழுத்  திருப்தியை வெளிப்படுத்தும் ஒரு ஹம்மிங். பற்பல பாடல்களில், உணர்ச்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் ஏற்ப  ஹம்மிங்கில்தான் மெல்லிசை மன்னர் எத்தனை வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார்!

அற்புதமான கவிதை வரிகளுக்கு அலாதியான ஒரு இனிமையுடன் கூடிய வித்தியாசமான டியூனில் அமைக்கப்பட்டுள்ள இசை!

அதிகம் கேட்கப்படாத  இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எனக்கு மனதில் ஒரு அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். அதுவும் அந்த ஹம்மிங்கைக் கேட்டால் எனக்கே வாழ்க்கையில் முழுத் திருப்தி ஏற்பட்டு விட்டது போன்ற மனநிலை ஏற்படும்.

கவிஞர், மெல்லிசை மன்னர் என்ற இரண்டு சித்தர்கள் சேர்ந்து உருவாக்கிய அபூர்வமான பாடல் இது.

இந்தப் பாடல் பற்றிய என் காணொளி;



வெள்ளி, 30 மார்ச், 2018

40. லொள் லொள் லொள் லொள்

மாடர்ன் தியேட்டர்ஸ் தயரிப்பான 'பாசவலை'  (1956ஆம் ஆண்டு வெளியானது) படத்துக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சில பாடல்கள் எழுதினார். இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி 

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர்  டி  ஆர் சுந்தரம் (டி ஆர் எஸ்) கண்டிப்புக்குப் பெயர் போனவர். அவர் அறையில் அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலி மட்டும்தான் இருக்கும். அவர் அறைக்கு யார் வந்தாலும் நின்றுகொண்டேதான் பேச வேண்டும்!

பட்டுக்கோட்டை கம்யூனிஸத்தில் ஈடுபாடு கொண்டவர்.  'கல்யாண பரிசு' படத்தில் வரும் 'வாடிக்கை மறந்ததும் ஏனோ?' என்ற காதல் டூயட்டில் கூட,

பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ?

என்று 'புரட்சி' என்ற சொல்லை வைத்திருப்பார். அவருக்கு சுயமரியாதை அதிகம் உண்டு.

ஒருமுறை டி ஆர் எஸ்  அவரைக் கூப்பிட்டு ஒரு பாடல் எழுதுவதைப்பற்றிப் பேசினார். சிறிது நேரத்தில் பட்டுக்கோட்டை அவர் அறைக்குள் வந்து அவரிடம் ஒரு தாளை நீட்டினார். 'அதற்குள்ளாகவா பாட்டு எழுதி விட்டார்?' என்று வியந்தபடியே தாளைப் பிரித்துப் பார்த்தார் டி ஆர் எஸ். அதில் 'மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவும்' என்று எழுதியிருந்தது. அதற்குப் பிறகு டி ஆர் எஸ்  தம் அறைக்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை உட்காரச் சொன்னார் .

இந்தப் படத்துக்காக

'உன் கண்ணைக் கேளு சொல்லும்
அதில் காதல் மீன்கள் துள்ளும்'

என்று பட்டுக்கோட்டை ஒரு பாட்டு எழுதியிருந்தார். அதற்கு இசை அமைக்கப்பட்டு ஜிக்கியின் குரலில் பாடல் பதிவு செய்யபட்டது. 

பாட்டைக் கேட்ட டி ஆர் எஸ், 'இந்தப் பாட்டைப் பாடுபவர் ஒரு புதுமுகம். எனவே பாடல் வரிகள் இலக்கியத் தரமாக இல்லாமல்,  எளிமையாக இருக்க வேண்டும்' என்றார்.

தான் ஒரு நல்ல பாடல் எழுதியும் அது ஏற்றுக்கொள்ளப்படாததால் பட்டுக்கோட்டை மனம் நொந்து விட்டார். வேறொரு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவு செய்து படத்திலிருந்து விலகி விடத் தீர்மானித்தார்.

அப்போது இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன், "ஏதாவது எளிமையா எழுதுங்க.. மச்சான் ஒன்னைப் பாத்து மயங்கிப்போனேன் நேத்து' என்கிற மாதிரி" என்று யோசனை சொன்னார். ( இது போல் பல பாடல்களுக்கு எம் எஸ் வி மனம் போன போக்கில் சொன்ன வரிகள் கண்ணதாசன் வாலி போன்றோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன!.)

'இதையே முதல் வரியாக வைத்துக் கொள்கிறேன்' என்று சொன்ன பட்டுக்கோட்டை பாட்டை எழுதி முடித்தார். இசை அமைக்கும்போது,எம் எஸ் வி  'லொள் லொள் லொள் லொள்' என்ற வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்டார். பாடல் ஹிட் ஆகி விட்டது. அத்துடன் இந்தப் பாடலுக்கு நடித்த புதுமுக நடிகை ராஜாமணி'லொள் லொள் ராஜாமணி' என்று அழைக்கப்பட்டார்! 

இந்த நிகழ்ச்சியை மெகா டிவியில் ஒளிபரப்பப்பட்டஎன்றும்  எம் எஸ் வி நிகழ்ச்சியிலும் வேறு சில நிகழ்ச்சிகளிலும் எம் எஸ் வியே  விவரித்திருக்கிறார். 

கீழே உள்ள வலைத்தளத்தில் லொள் லொள் என்ற பாட்டை  கிளிக் செய்தால் எம் எஸ் வி இந்த நிகழ்ச்சியை விவரிப்பதைக் கேட்கலாம்.

https://gaana.com/album/paasa-valai

youtubeஇல் பாடலைக் கேட்க:





'பாசவலை' படம் பற்றி ஹிந்து பத்திரிகையில் 14-06-2012 அன்று ராண்டார் கை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்தப் பாடல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ( பட்டுக்கோட்டை டி ஆர் எஸ் விரும்பியபடி பாட்டு எழுத விரும்பாமல் படத்திலிருந்து விலகி விட்டதாகவும், டி ஆர் எஸ் அடியாட்களை அனுப்பி, பட்டுக்கோட்டையை அழைத்து வர வைத்ததாகவும் இந்தக் கட்டுரையில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது!)

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/paasavalai-1956/article3564081.ece

திங்கள், 5 மார்ச், 2018

39. 'குடிகாரன்' பேச்சு!

பழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு முறை வெவ்வேறு காட்சிகளில் ஒலிக்கும். ஒன்று மகிழ்ச்சி, இன்னொன்று சோகம் அல்லது ஒன்று நாயகி நாயகனைச் சீண்டும் விதத்தில் பாடுவது இன்னொன்று நாயகன் நாயகிக்கு பதிலடி கொடுப்பது (ஆணாதிக்கம் மிகுந்த (திரை)உலகில் ஆண் பெண்ணைச் சீண்டுவது, பெண் அதற்குப் பதிலடி  கொடுப்பது என்ற நடைமுறைக்கு இடமில்லை!) என்பவையாக இந்த இரண்டு பாடல் காட்சிகளும் (பெரும்பாலும்) இருக்கும். காட்சிகள் வேறுபடுவதால் பாடல் வரிகள் வேறுபடும். டியூன் அதேபோன்று இருந்தாலும் இசையமைப்பும் மாறுபடும்.

இரண்டு விதமாய் ஒலிக்கும் இத்தகைய பாடல்கள்' மெல்லிசை மன்னரின் (மன்னர்களின்) இசையில்தான் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. ஏ எம் ராஜாவின் இசையில் 'உன்னைக்கண்டு நானாட,' 'காதலிலே தோல்வியுற்றான்,' 'எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே,' தனிமையிலே இனிமை காண முடியுமா,' ஆர் சுதர்சனத்தின் இசையில் 'ஏமாறச் சொன்னது நானோ,' இளையராஜாவின் இசையில் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்,'  'வெள்ளைப்புறா ஒன்று,' 'என்னைப் பாடச்  சொல்லாதே,' போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான்  இத்தகைய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.  ஆனால் மெல்லிசை மன்னரின் இசையில் 1959ஆம் ஆண்டு வெளியான தங்கப்பதுமை  படத்தில் வரும் 'என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்' பாடலில் தொடங்கி, 1989இல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தில் இடம் பெற்ற 'சின்னஞ்சிறு கிளியே பாடல் வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்த வகைப் பாடல்கள்' இருக்கின்றன. இத்தகைய பாடல்களின் இரு வடிவங்களில் அவர் கையாண்டிருக்கும் வித்தியாசமான இசை அணுகுமுறை சுவாரசியமானது.

1964ஆம் ஆண்டு வெளியான 'பணக்கார குடும்பம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் 'அத்தை மகள்  ரத்தினத்தை' பாடலை எடுத்துக் கொள்வோம்.

முதலில் நாயகி (சரோஜாதேவி) நாயகனை ( எம் ஜி ஆரை)ச்  சீண்டுவது போல் பாடுகிறார். கண்ணதாசன் பாடல் வரிகளை அனாயாசமாக எழுதி இருக்கிறார். பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு கேள்வியாக அமைந்திருக்கிறது.

அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்னநடை சின்னஇடை எல்லாம் வெறுத்தாரா?

முத்து முத்துப் பேச்சு கத்திவிழி வீ ச்சு அத்தனையும் மறந்தாரா?
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா?*
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையைக் கெடுப்பாரா?
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா?

கொட்டுமுழக்கோடு கட்டழகு மேனி தொட்டு விட  மனமில்லையா?
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப்பாதி கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா?
மேடைதனில் நின்று தோழர்களைக் கண்டு சொல்லாமல் வருவேனா?

* இந்த வரியைப் புரிந்து கொள்ள கோனார் உரை தேவைப்படலாம்!. 'கண்ணுக்கு எதிரே இருக்கும் நாயகனை ரசிக்காமல் முன்னழகு இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குகிறது. நாயகிக்கு முன்னே நிற்கும் நாயகனைப் பார்க்க முடியவில்லையே என்று பின்னழகு ஏங்குகிறது' என்று நான் பொருள் கொள்கிறேன்!

சரியான இடங்களில் வார்த்தைகளை நிறுத்தி எம் எஸ் வி போட்டிருக்கும் டியூன் தேனைப் போன்ற இனிமை கொண்டது. அவர் போட்டிருக்கும் நூற்றுக்கணக்கான 'ஹம்மிங்'களில், சீண்டலை வெளிப்படுத்தும்  இந்த 'ஒஹோ ஒஹோ ஒஹோ' ஒரு தனி ரகம். (இன்னொரு சீண்டல் பாடலான 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ'வில் வரும் 'அஹஹஹா அஹஹஹா அஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா'வுடன் இதை ஒப்பிடலாம்.)

'பப்பப்பப்பப்பப்பப்பப்பப் பபபபபபா' என்று வரும் இடையிசை எம்ஜிஆரை மட்டும் இன்றி பாட்டைக் கேட்கும்  நம்மையும்  இழுத்துப் பிடிக்கிறது' அதற்குப் பிறகு வரும் டுடுடூ டுடுடூ என்ற இசையில் ஒரு சீண்டல் தொனி ஒலிக்கிறது. 'முத்து முத்துப் பேச்சு......' என்ற வரிக்குத் தான் போட்டிருக்கும் டியூனை ரசித்த மெல்லிசை மன்னர் அதை மீண்டும் வாத்தியத்தில் ஒலிக்கச் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

சரணத்தில் ஒவ்வொரு வரியிலும் டியூனில் மாறுபாடு தெரிகிறது. முதல் சரணத்தில் வரும் மூன்றாவது அடியான 'முத்திரையைப் போட்டு...' என்ற வரி மற்ற மூன்று வரிகளை விடச் சற்று நீளமாக அமைந்திருப்பதால் அதை மடக்கி டியூன் அமைத்திருக்கிறார். ஆனால் இரண்டாவது சரணத்தின் மூன்றாவது அடியான 'விட்டுப் பிரிந்தாலும்..' என்ற வரி அதிக நீளத்தில் இல்லை. ஆயினும் இந்த வரியையும், முதல் சரணத்தில் வரும் மூன்றாம் அடியைப் போலவே அமைத்திருக்கிறார் மன்னர்!

சரோஜாதேவியின் நடன அசைவுகள்  மிக நளினம். சற்றும் விரசம் தொனிக்காமல் எழிலுடனும், கண்ணியத்துடனும் பாடல் வரிகளை அபிநயம் பிடித்துக் காட்டுவதில் 'அபிநய சரஸ்வதி'க்கு நிகர் எவரும் இல்லை என்பது என் கருத்து. 'அன்ன நடை,' 'சின்ன இடை,'  'முன்னழகு தூங்க,' 'முத்திரையைப் போட்டு' போன்ற வரிகளுக்கான அவரது அபிநயத்தை கவனியுங்கள்.

பாடலை இங்கே கண்டு, கேட்டு ரசிக்கலாம்.


இரண்டாவதாக வரும் பாடல் நாயகிக்கு நாயகன் பதிலடி கொடுக்கும் பாடல். காதல் தோல்வியால் விரக்தி அடைந்து குடித்தது போல் நடித்து நாயகியைக்  கலவரப்பட்ட வைக்கும் வகையில் நாயகன் பாடும் பாடல் இது.

குடிகாரன் பேச்சாக ஒலிக்கும் இந்தப் பாடலில் இப்படி ஒரு கவிநயமா? பிரமிக்க வைக்கிறார் கண்ணதாசன். ஏதோ கம்பராமாயணம் போன்ற ஒரு காவியத்தை எழுதுவது போல் இந்தப் பாடலைப் புனைந்திருக்கிறார் கண்ணதாசன்.

 அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்னநடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை

சிட்டுவிழி வீசி சின்னமொழி பேசி சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கறும்புச் சாறும் தென்னை இளநீரும் தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ணரதம் காண வந்திருந்த மன்னன் வானரதம்** தேடுகிறான்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை எண்ணி எண்ணி வாடுகிறான்

கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன் காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மணமேடை நாடகத்தில் ஆடும் கோலத்தைக் களைத்து விட்டேன்.
அன்னை மீதாணை தந்தை மீதாணை என்னை நீ தீண்டாதே
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம் அதுவரை தடுக்காதே

(**'வானரதம் தேடுகிறான்' என்ற வார்த்தைகளுக்கு காதல் தோல்வியால் மனமுடைந்து வானுலகம் செல்ல விரும்புகிறான்.' என்று பொருள் கொள்ளலாம். அல்லது குடித்து விட்டு போதையில் வானில் மிதப்பது போல் மிதக்க விரும்புகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.)

நாயகன் கிணற்றுக் கட்டையின் மீது நடப்பதும், அவன்  போதையில் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுவாரோ என்று நாயகி பதறுவதுமாக அமைந்திருக்கும் இந்தக் காட்சிதான் கே.விஸ்வநாத்தின் 'சலங்கை ஒலி படத்தில் கமல் குடிபோதையில் கிணற்றின் மீது நடந்தபடி 'தகிட தகிட தகிட தந்தானா' என்று பாடும் காட்சிக்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பாடல் துவங்கும்போதே எம் எஸ் வியின் இசையில் வாத்தியக்  கருவிகள் (குடிபோதையில்!) தள்ளாடுகின்றன. ஹம்மிங்கில் போதை தெரிவதில் வியப்பில்லை. ஆனால் ஹம்மிங்கைத் தொடர்ந்து வரும் சீட்டியில் (விசில்) கூட  போதை தெரிவது வியப்பளிக்கிறது. விசில் அடித்தவர் அநேகமாக 'நெஞ்சத்திலே நீ நேற்று வாந்தாய்' பாடலில் விசில் அடித்த எம் எஸ் ராஜு (மாண்டலின் ராஜு)வாக இருக்கலாம். எம் எஸ் வியே விசில் அடிப்பதில்  பெற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

போதையுடன் ஒலிக்கும் பல்லவிக்குப் பின் வரும் வேகமான இசை நாகேஷின் அற்புதமான நடனத்துக்கு உதவும் வகையில் பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டபோது சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். கிராமஃபோன் இசைத்தட்டில் இந்த வேகமான இசை இடம் பெறவில்லை என்று நினைவு. சில வினாடிகளே வந்தாலும் நாகேஷின் நடன அசைவுகள் வியக்க வைப்பவை.

பாடல் இதோ



ஒரு சாதாரணப் படக் காட்சிக்கான பாடலை ஒரு அற்புதமான கலைப்படைப்பாக மாற்றுவது கண்ணதாசனுக்கும் எம் எஸ் விக்கும் ஒரு பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது!

இந்த இரு பாடல்களும் எனக்கு அளிக்கும் போதையிலிருந்து என்னால் எளிதில் விடுபட முடிவதில்லை. விடுபட நான் விரும்பியதும் இல்லை!





புதன், 28 பிப்ரவரி, 2018

38. பட்டுச்சிறகு விரிப்பும் முத்துப்பல் சிரிப்பும்!

சிறந்த ஓவியர்கள், கவிஞர்கள், பிற கலை இலக்கியப்  படைப்பாளிகள் ஆகியோரின் படைப்புகளை ஆராயும்போது கலை, இலக்கிய ஆய்வாளர்கள் (connoisseurs), ஒரு கலைஞனின் படைப்புகளுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டறிவார்கள்.

சில சமயம், ஒரு ஓவியம் யார் தீட்டியது என்பது தெரியாத நிலையில், அந்த ஓவியத்துக்கும், குறிப்பிட்ட ஓவியரின் பிற ஓவியங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து அந்த ஓவியத்தைத் தீட்டியவர் அந்த ஓவியர்தான் என்று முடிவு செய்வது பலமுறை நிகழ்ந்திருக்கிறது.

மெல்லிசை மன்னரின் சில பாடல்களுக்கிடையே இருக்கக்கூடிய சில பொதுவான இசை அம்சங்களை நான் கவனித்து வியந்திருக்கிறேன்.

ராகங்கள் பற்றிய அறிவு இல்லாத நிலையில் இசை ஆர்வம் கொண்ட ஒரு பாமர ரசிகனாகவே இந்த ஒற்றுமைகளை நான் கவனித்திருக்கிறேன்.
அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்களுக்குள் இருக்கும் ஒற்றுமை வேறு. இது பற்றி நான் இன்னொரு பதிவில் எழுதியிருக்கிறேன். ஆனால் இங்கே நான் குறிப்பிடும் ஒற்றுமைகள் வேறு சந்தங்களில் அமைந்த பாடல்களுக்கிடையே உள்ள ஒற்றுமை.

ஏ எல் ராகவன் அவர்கள் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், ஒவ்வொரு பாடலும் முத்தான பாடல்! எங்கிருந்தாலும் வாழ்க, அன்று ஊமைப் பெண்ணல்லோ, கால்கள் நின்றது  நின்றதுதான், திங்களுக்கு இன்று என்ன திருமணமோ, காதல் என்றால் ஆணும் பெண்ணும், பட்டுச்சிறகு கொண்ட  சிட்டுக்குருவி, இங்கே தெய்வம் பாதி  ஒன்று என்ற பல பாடல்களைக் குறிப்பிடலாம்.

இவற்றில் 1964ஆம் ஆண்டு வெளியான கருப்புப்பணம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக்குருவி ஒன்று' என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். ஏ எல் ஆரும் எல் ஆர் ஈஸ்வரியும் இணைந்து பாடியுள்ள இந்தப்பாடல் பட்டுச் சிறகால் நம்  உடலை வருடுவது போல் நம் மனதை வருடி விட்டுச் செல்லும் இனிய தன்மை கொண்டது. 'பட்டு' என்ற சொல் பாடலில் இருந்தாலே அந்தப் பாட்டில் ஒரு அலாதியான மென்மையை (மேன்மையை)ப் புகுத்தி விடுவார் எம் எஸ் வி. 'பட்டிலும் மெல்லிய பெண் இது' என்ற பாடலிலும் இந்த மென்மையை உணர முடியும்.

முகப்பு இசையைக் கேட்டதுமே நமக்கு ஒரு ஈர்ப்பு  ஏற்படும். பிறகு பல்லவியைக் கேட்டால் இப்படி ஒரு ராகமா  என்று பிரமிக்கத் தோன்றும். இது போன்ற ஒரு நீளமான பல்லவிக்கு இப்படி ஒரு டியூன் போட மெல்லிசை மன்னர் ஒருவரால் மட்டுமே முடியும்! பிறகு வரும் இணைப்பிசை நம்மைப் பிடித்து இழுக்கும். சரணமோ பல்லவிக்குச் சவால் விடும் அளவுக்கு இருக்கும். இந்தப் பாடலில் இனிமையில் விஞ்சி நிற்பது பல்லவியா சரணமா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் இணைப்பிசை முதல் சரணத்துக்கு முன் வருவது போன்றதுதான் என்றாலும், இதில் ஒரு சிறிய ஹம்மிங்கைக் கொடுத்து  ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மனிதர்! (இந்த ஹம்மிங் பலே பாண்டியா படத்தில் வரும் 'ஆதி மனிதன் காதலுக்குப் பின்' என்ற பாடலின் இறுதியில் வரும் ஹம்மிங்கை ஒத்திருப்பது இன்னொரு ஒற்றுமை!)

தென்றலைப்போல்சு நம்மைக் குளிர்விக்கும் சுகமான, இதமான, திகட்டாத பாடல் இது.


இப்போது 1973ஆம் ஆண்டு வந்த பூக்காரி படத்தில் இடம் பெற்றுள்ள 'முத்துப்பல் சிரிப்பென்னவோ' பாடலை எடுத்துக் கொள்வோம்.





இந்த இரண்டு பாடல்களையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாகக் கேட்டாலும் இரண்டு பாடல்களும் வெவ்வேறு தளத்தில் அமைந்ததாகத்தான் தோன்றும். ஆனால் இரு பாடல்களின் சரணங்களை மட்டும் கவனமாகக் கேட்டால் அவை ஒரே மாதிரி இருப்பதை உணர முடியும்.

இசை நுணுக்கங்கள் அறிந்தவர்களும், கீபோர்டில் பாடல்களை வாசிக்கும் திறன் பெற்றவர்களும் இரு பாடல்களுக்கும் உள்ள மற்ற ஒற்றுமைகளைக் கண்டறிய (கேட்டறிய)க்  கூடும். நான் குறிப்பிட்டிருப்பது மேலோட்டமாக எனக்குப் புலப்பட்ட ஒற்றுமையைத்தான்.

சனி, 17 பிப்ரவரி, 2018

37. பொன் ஒன்று கண்டேன்

1962ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் 'படித்தால் மட்டும் போதுமா.'

பாலாஜி, சிவாஜி இருவரில், அண்ணன் பாலாஜி படித்தவர், தம்பி சிவாஜி படிக்காதவர். இருவருக்கும் முறையே படித்த பெண்ணான ராஜசுலோசனா, படிக்காத பெண்ணான சாவித்திரி ஆகிய இருவரையும் மணமுடிக்க அவர்கள் பெற்றோர் உத்தேசித்து, பெண் பார்க்க ஏற்பாடு செய்யம்போது சகோதரர்கள் இருவரும் பெண் பார்க்க வெட்கப்படுவதால்(!), அண்ணனுக்குப் பார்த்த பெண்ணைத் தம்பியும், தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணனும் பார்ப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.

அதுபோல் இருவரும் பெண் பார்த்து விட்டு வந்த பிறகு தாங்கள் பார்த்த பெண்ணைப் பற்றி வர்ணித்துப் பாடும் பாடல் இது.

இதற்கிடையே சிவாஜிக்குப் பார்த்த சாவித்திரியினால் கவரப்பட்ட பாலாஜி அவளைத் தானே திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு, தன்னைப்  பற்றித் தவறான எண்ணம் ஏற்படும் விதத்தில், தனக்குப் பார்க்கப்பட்ட பெண்ணான ராஜசுலோசனாவின் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அனுப்புகிறார்.

பாலாஜி, சிவாஜி இருவரின் மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் அங்கங்கே மறைபொருளாகச் சில விஷயங்களை வைத்து இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர்.

விஸ்வநாதன் ராமாமூர்த்தியின் இசையில் மனதை வருடிக் கொடுப்பது போல் அலாதியான இனிமையுடன் அமைந்திருக்கும் இந்த அற்புதமான பாடல் பிருந்தாவன சாரங்கா ராகத்தின் சாயலில் அமைந்திருப்பதாகச் சொல்வார்கள். 'ராகத்தின் சாயலில்' என்று நான் சொல்வதற்குக்  காரணம்,  சுப்புடு அவர்கள் கூறியது போல்  எம் எஸ் வியின் பாடல்கள் பெரும்பாலும் அவரது சொந்த ராகத்தில் அமைந்தவை என்பதுதான்!

பாடலில் கவிஞர் வைத்திருக்கும் உட்பொருளையும், எம் எஸ் வியின் நுணுக்கமான இசைச் செதுக்கல்களையும் பார்க்கலாம்.

(பாடலின் சில வரிகளில் மட்டும் - நான் கருத்துத் தெரிவித்திருக்கும் வரிகளில் மட்டும் - பாடியவர் சிவாஜி/பாலாஜி என்று குறிப்பிட்டிருக்கிறேன்.)

பல்லவி
சிவாஜி: பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
(தான் பார்த்தது தனக்கு அண்ணியாக வரப்போகிற பெண் என்பதால், அந்தப் பெண்ணைப் பற்றித் தான் வர்ணிப்பது முறையாகுமா என்ற பொருளில் 'சொல்லலாகுமா?' என்கிறார்.)

பாலாஜி: என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?
(மேலோட்டமாகப் பார்த்தால் 'அவளைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.' என்று பொருள் வரும்.  ஆனால் இதன் உட்பொருள் "நான் ஏன் அவளைப் பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும்? அவளைத்தான் நானே கல்யாணம் செய்து கொள்வது என்று முடிவு செய்து விட்டேனே!')

பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
என்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்காரச் சின்னம்
அலை போல மின்னும்
(அலை என்ற சொல் உச்சரிக்கப்படும் விதத்தைக் கேளுங்கள்!)

நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
வெள்ளி நிலா
('துள்ளி வரும்' என்ற சொற்களே துள்ளி விழும் அழகை மெல்லிசை மன்னரின் இசையில்தான் காண முடியும்!)

துவண்டு விழும்
கொடி இடையாள்
(சொற்களே துவள்கின்றனவே!)

விண்ணோடு விளையாடும் பெண்
அந்தப்  பெண் அல்லவோ
(விண்ணோடு என்ற வார்த்தையில் மேல் தொனியில் துவங்கும் இசை படிப்படியாகக் கீழே இறங்கி பெண் அல்லவோ என்ற இடத்தில் கீழே வந்து விடுகிறது! விண்ணையும், மண்ணில் இருக்கும் பெண்ணையும்  இணைக்கும் ஒரு சாய்தளம் போல் அமைந்திருக்கிறது இந்த வரி. இந்த வரியின் இசை சிவாஜியின் உடல் அசைவுக்கு  எந்த அளவுக்கு உந்துதலாக இருக்கிறது என்பதைக் காட்சியில் பார்க்கலாம். சிவாஜி நீச்சல் குளத்தின் படிகளில் ஏறி  உயரமான இடத்துக்கு வந்து விண்ணோடு என்ற வரி வரும்போது கையை உயர்த்திப் பிறகு கையைப் படிப்படியாக இறக்குகிறார். அவரது இந்த அசைவை இயக்குவது இந்த வரியின் இசைதான் என்பதை இந்தக் காட்சியைப் பார்க்கும் எவரும் உணர முடியும். 'புதையல்' படத்தில் வரும் 'விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே என்ற பாடலில் விண், முகில், நிலவு மூன்றுமே ஒரே தளத்தில் இருப்பதால் - விஞ்ஞான ரீதியாக அல்ல! -  அந்த வரி ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரே சீராக இருப்பதை,விண்ணோடு விளையாடும்...' என்ற இந்த வரியுடன் ஒப்பிட்டால் எம் எஸ் வி வார்த்தைகளுக்குக்  கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்)

சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…
(ஜூலியஸ் சீசரைப் பற்றிய came, saw and conquered (veni, vici, vidi in Latin) என்ற வரிகளைப் பின்பற்றிக் கவிஞர் இதை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.)

சிவாஜி: நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

பாலாஜி: உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை
(எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்ற எண்ணத்தில்  நீ பார்த்தது போல் நான் பார்க்கவில்லை! நான் அவளை என் மனைவியாக நினைத்துத்தான் பார்த்தேன்!)

என் விழியில்
நீ இருந்தாய்
(என் விழி மூலம் பார்த்தது நீதான் என்கிறார் சிவாஜி. தான் பார்த்ததாக அவர் சொல்லவில்லை )

உன் வடிவில்
நான் இருந்தேன்
(சிவாஜி 'நீ' என்று சொன்னதற்கு மாறாக பாலாஜி 'நான்' என்கிறார்.  'நான்' என்ற சொல்  அவருடைய சுயநலத்தையும், உள் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது!)

 நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பான அம்சம் தாளம். பாடல் துவங்கும்போது இருவரும் நீச்சல் குளத்தில் குளிக்கிறார்கள். அதனால் துவக்கத்தில் தாளம் ஒலிப்பது போல் தெரியாமலே ஒலிக்கிறது. அவ்வப்போது நீர்ப்பரப்பின் மீது நீர் சொட்டும் ஓசை போன்ற ஓசை பின்னணியில் மெலிதாகக் கேட்கிறது. சிறிது சிறிதாகத்  தாள ஒலி அதிகரிக்கிறது. முதல் சரணத்தின் இடையிலேயே, இருவரும் குளத்திலிருந்து ஏறி  வந்து விடுகிறார்கள். அப்போது தாளம் சற்று எடுப்பாக ஒலிப்பதை கவனிக்கலாம். ஸ்டீரியோ வசதிமில்லாத காலத்தில் இத்தனை நுணுக்கங்களைச் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர்!

பாடலின் ராகம், பின்னணி இசை ஆகியவற்றின் அருமையை விவரிக்க இசையறிவு வேண்டும். அது எனக்கு இல்லை. அதனால் தென்றல் போல் மென்மையாக வந்து தழுவும் முகப்பிசையையும், இரண்டாவது சரணத்துக்கு முன்பு வரும் ஷெனாய் இசையையும் மட்டும் குறிப்பிட்டு விட்டு என் ரசிப்புரையை முடித்துக் கொள்கிறேன்.