வெள்ளி, 30 மார்ச், 2018

40. லொள் லொள் லொள் லொள்

மாடர்ன் தியேட்டர்ஸ் தரிப்பான 'பாசவலை'  (1956ஆம் ஆண்டு வெளியானது) படத்துக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சில பாடல்கள் எழுதினார். இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி 

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி .ஆர். சுந்தரம் (டி ஆர் எஸ்) கண்டிப்புக்குப் பெயர் போனவர். அவர் அறையில் அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலி மட்டும்தான் இருக்கும். அவர் அறைக்கு யார் வந்தாலும் நின்று கொண்டேதான் பேச வேண்டும்!

பட்டுக்கோட்டையார் கம்யூனிஸத்தில் ஈடுபாடு கொண்டவர்.  'கல்யாண பரிசு' படத்தில் வரும் 'வாடிக்கை மறந்ததும் ஏனோ?' என்ற காதல் டூயட்டில் கூட,

பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ?

என்று 'புரட்சி' என்ற சொல்லை வைத்திருப்பார். 

அவருக்கு சுயமரியாதை அதிகம் உண்டு.

ஒருமுறை டி ஆர் எஸ் அவரைக் கூப்பிட்டு ஒரு பாடல் எழுதுவதைப்பற்றிப் பேசினார். சிறிது நேரத்தில் பட்டுக்கோட்டையார் டி ஆர் எஸ்ஸின் அறைக்குள் வந்து அவரிடம் ஒரு தாளை நீட்டினார். 'அதற்குள்ளாகவா பாட்டு எழுதி விட்டார்?' என்று வியந்தபடியே தாளைப் பிரித்துப் பார்த்தார் டி ஆர் எஸ். அதில் 'மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவும்' என்று எழுதியிருந்தது. அதற்குப் பிறகு டி ஆர் எஸ்  தம் அறைக்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை உட்காரச் சொன்னார் .

இந்தப் படத்துக்காக

'என் கண்ணைக் கேளு சொல்லும்
அதில் காதல் மீன்கள் துள்ளும்'

என்று பட்டுக்கோட்டையார் ஒரு பாட்டு எழுதியிருந்தார். அதற்கு இசை அமைக்கப்பட்டு ஜிக்கியின் குரலில் பாடல் பதிவு செய்யபட்டது. 

பாட்டைக் கேட்ட டி ஆர் எஸ், 'இந்தப் பாட்டைப் பாடுபவர் ஒரு புதுமுகம். எனவே பாடல் வரிகள் இலக்கியத் தரமாக இல்லாமல், எளிமையாக இருக்க வேண்டும்' என்றார்.

தான் ஒரு நல்ல பாடல் எழுதியும் அது ஏற்றுக் கொள்ளப்படாததால் பட்டுக்கோட்டை மனம் நொந்து விட்டார். வேறொரு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவு செய்து படத்திலிருந்து விலகி விடத் தீர்மானித்தார்.

அப்போது இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன், "ஏதாவது எளிமையா எழுதுங்க.. மச்சான் ஒன்னைப் பாத்து மயங்கிப்போனேன் நேத்து' என்கிற மாதிரி" என்று யோசனை சொன்னார். ( இது போல் பல பாடல்களுக்கு எம் எஸ் வி மனம் போன போக்கில் சொன்ன வரிகள் கண்ணதாசன் வாலி போன்றோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன!)

'இதையே முதல் வரியாக வைத்துக் கொள்கிறேன்' என்று சொன்ன பட்டுக்கோட்டையார் பாட்டை எழுதி முடித்தார். இசை அமைக்கும்போது,எம் எஸ் வி  'லொள் லொள் லொள் லொள்' என்ற வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்டார். பாடல் ஹிட் ஆகி விட்டது. அத்துடன் இந்தப் பாடலுக்கு நடித்த புதுமுக நடிகை ராஜாமணி 'லொள் லொள் ராஜாமணி' என்று அழைக்கப்பட்டார்! 

இந்த நிகழ்ச்சியை மெகா டிவியில் ஒளிபரப்பப்பட்டஎன்றும்  எம் எஸ் வி நிகழ்ச்சியிலும், வேறு சில நிகழ்ச்சிகளிலும் எம் எஸ் வியே  விவரித்திருக்கிறார். 

கீழே உள்ள இந்தப் பாடலின் காணொளியில் எம் எஸ் வி இந்த நிகழ்ச்சியை விவரிப்பதைக் கேட்கலாம்.

'பாசவலை' படம் பற்றி ஹிந்து பத்திரிகையில் 14-06-2012 அன்று ராண்டார் கை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்தப் பாடல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ( டி ஆர் எஸ் விரும்பியபடி பாட்டு எழுத விரும்பாமல் பட்டுக்கோட்டையார் படத்திலிருந்து விலகி விட்டதாகவும், டி ஆர் எஸ் அடியாட்களை அனுப்பி, பட்டுக்கோட்டையாரை அழைத்து வர வைத்ததாகவும் இந்தக் கட்டுரையில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது!)

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/paasavalai-1956/article3564081.ece

திங்கள், 5 மார்ச், 2018

39. 'குடிகாரன்' பேச்சு!

பழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு முறை வெவ்வேறு காட்சிகளில் ஒலிக்கும். ஒன்று மகிழ்ச்சி, இன்னொன்று சோகம் அல்லது ஒன்று நாயகி நாயகனைச் சீண்டும் விதத்தில் பாடுவது இன்னொன்று நாயகன் நாயகிக்கு பதிலடி கொடுப்பது (ஆணாதிக்கம் மிகுந்த (திரை)உலகில் ஆண் பெண்ணைச் சீண்டுவது, பெண் அதற்குப் பதிலடி  கொடுப்பது என்ற நடைமுறைக்கு இடமில்லை!) என்பவையாக இந்த இரண்டு பாடல் காட்சிகளும் (பெரும்பாலும்) இருக்கும். காட்சிகள் வேறுபடுவதால் பாடல் வரிகள் வேறுபடும். டியூன் அதேபோன்று இருந்தாலும் இசையமைப்பும் மாறுபடும்.

இரண்டு விதமாய் ஒலிக்கும் இத்தகைய பாடல்கள்' மெல்லிசை மன்னரின் (மன்னர்களின்) இசையில்தான் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. ஏ எம் ராஜாவின் இசையில் 'உன்னைக்கண்டு நானாட,' 'காதலிலே தோல்வியுற்றான்,' 'எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே,' தனிமையிலே இனிமை காண முடியுமா,' ஆர் சுதர்சனத்தின் இசையில் 'ஏமாறச் சொன்னது நானோ,' இளையராஜாவின் இசையில் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்,'  'வெள்ளைப்புறா ஒன்று,' 'என்னைப் பாடச்  சொல்லாதே,' போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான்  இத்தகைய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.  ஆனால் மெல்லிசை மன்னரின் இசையில் 1959ஆம் ஆண்டு வெளியான தங்கப்பதுமை  படத்தில் வரும் 'என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்' பாடலில் தொடங்கி, 1989இல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தில் இடம் பெற்ற 'சின்னஞ்சிறு கிளியே பாடல் வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்த வகைப் பாடல்கள்' இருக்கின்றன. இத்தகைய பாடல்களின் இரு வடிவங்களில் அவர் கையாண்டிருக்கும் வித்தியாசமான இசை அணுகுமுறை சுவாரசியமானது.

1964ஆம் ஆண்டு வெளியான 'பணக்கார குடும்பம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் 'அத்தை மகள்  ரத்தினத்தை' பாடலை எடுத்துக் கொள்வோம்.

முதலில் நாயகி (சரோஜாதேவி) நாயகனை ( எம் ஜி ஆரை)ச்  சீண்டுவது போல் பாடுகிறார். கண்ணதாசன் பாடல் வரிகளை அனாயாசமாக எழுதி இருக்கிறார். பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு கேள்வியாக அமைந்திருக்கிறது.

அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்னநடை சின்னஇடை எல்லாம் வெறுத்தாரா?

முத்து முத்துப் பேச்சு கத்திவிழி வீ ச்சு அத்தனையும் மறந்தாரா?
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா?*
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையைக் கெடுப்பாரா?
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா?

கொட்டுமுழக்கோடு கட்டழகு மேனி தொட்டு விட  மனமில்லையா?
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப்பாதி கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா?
மேடைதனில் நின்று தோழர்களைக் கண்டு சொல்லாமல் வருவேனா?

* இந்த வரியைப் புரிந்து கொள்ள கோனார் உரை தேவைப்படலாம்!. 'கண்ணுக்கு எதிரே இருக்கும் நாயகனை ரசிக்காமல் முன்னழகு இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குகிறது. நாயகிக்கு முன்னே நிற்கும் நாயகனைப் பார்க்க முடியவில்லையே என்று பின்னழகு ஏங்குகிறது' என்று நான் பொருள் கொள்கிறேன்!

சரியான இடங்களில் வார்த்தைகளை நிறுத்தி எம் எஸ் வி போட்டிருக்கும் டியூன் தேனைப் போன்ற இனிமை கொண்டது. அவர் போட்டிருக்கும் நூற்றுக்கணக்கான 'ஹம்மிங்'களில், சீண்டலை வெளிப்படுத்தும்  இந்த 'ஒஹோ ஒஹோ ஒஹோ' ஒரு தனி ரகம். (இன்னொரு சீண்டல் பாடலான 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ'வில் வரும் 'அஹஹஹா அஹஹஹா அஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா'வுடன் இதை ஒப்பிடலாம்.)

'பப்பப்பப்பப்பப்பப்பப்பப் பபபபபபா' என்று வரும் இடையிசை எம்ஜிஆரை மட்டும் இன்றி பாட்டைக் கேட்கும்  நம்மையும்  இழுத்துப் பிடிக்கிறது' அதற்குப் பிறகு வரும் டுடுடூ டுடுடூ என்ற இசையில் ஒரு சீண்டல் தொனி ஒலிக்கிறது. 'முத்து முத்துப் பேச்சு......' என்ற வரிக்குத் தான் போட்டிருக்கும் டியூனை ரசித்த மெல்லிசை மன்னர் அதை மீண்டும் வாத்தியத்தில் ஒலிக்கச் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

சரணத்தில் ஒவ்வொரு வரியிலும் டியூனில் மாறுபாடு தெரிகிறது. முதல் சரணத்தில் வரும் மூன்றாவது அடியான 'முத்திரையைப் போட்டு...' என்ற வரி மற்ற மூன்று வரிகளை விடச் சற்று நீளமாக அமைந்திருப்பதால் அதை மடக்கி டியூன் அமைத்திருக்கிறார். ஆனால் இரண்டாவது சரணத்தின் மூன்றாவது அடியான 'விட்டுப் பிரிந்தாலும்..' என்ற வரி அதிக நீளத்தில் இல்லை. ஆயினும் இந்த வரியையும், முதல் சரணத்தில் வரும் மூன்றாம் அடியைப் போலவே அமைத்திருக்கிறார் மன்னர்!

சரோஜாதேவியின் நடன அசைவுகள்  மிக நளினம். சற்றும் விரசம் தொனிக்காமல் எழிலுடனும், கண்ணியத்துடனும் பாடல் வரிகளை அபிநயம் பிடித்துக் காட்டுவதில் 'அபிநய சரஸ்வதி'க்கு நிகர் எவரும் இல்லை என்பது என் கருத்து. 'அன்ன நடை,' 'சின்ன இடை,'  'முன்னழகு தூங்க,' 'முத்திரையைப் போட்டு' போன்ற வரிகளுக்கான அவரது அபிநயத்தை கவனியுங்கள்.

பாடலை இங்கே கண்டு, கேட்டு ரசிக்கலாம்.


இரண்டாவதாக வரும் பாடல் நாயகிக்கு நாயகன் பதிலடி கொடுக்கும் பாடல். காதல் தோல்வியால் விரக்தி அடைந்து குடித்தது போல் நடித்து நாயகியைக்  கலவரப்பட்ட வைக்கும் வகையில் நாயகன் பாடும் பாடல் இது.

குடிகாரன் பேச்சாக ஒலிக்கும் இந்தப் பாடலில் இப்படி ஒரு கவிநயமா? பிரமிக்க வைக்கிறார் கண்ணதாசன். ஏதோ கம்பராமாயணம் போன்ற ஒரு காவியத்தை எழுதுவது போல் இந்தப் பாடலைப் புனைந்திருக்கிறார் கண்ணதாசன்.

 அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்னநடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை

சிட்டுவிழி வீசி சின்னமொழி பேசி சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கறும்புச் சாறும் தென்னை இளநீரும் தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ணரதம் காண வந்திருந்த மன்னன் வானரதம்** தேடுகிறான்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை எண்ணி எண்ணி வாடுகிறான்

கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன் காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மணமேடை நாடகத்தில் ஆடும் கோலத்தைக் களைத்து விட்டேன்.
அன்னை மீதாணை தந்தை மீதாணை என்னை நீ தீண்டாதே
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம் அதுவரை தடுக்காதே

(**'வானரதம் தேடுகிறான்' என்ற வார்த்தைகளுக்கு காதல் தோல்வியால் மனமுடைந்து வானுலகம் செல்ல விரும்புகிறான்.' என்று பொருள் கொள்ளலாம். அல்லது குடித்து விட்டு போதையில் வானில் மிதப்பது போல் மிதக்க விரும்புகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.)

நாயகன் கிணற்றுக் கட்டையின் மீது நடப்பதும், அவன்  போதையில் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுவாரோ என்று நாயகி பதறுவதுமாக அமைந்திருக்கும் இந்தக் காட்சிதான் கே.விஸ்வநாத்தின் 'சலங்கை ஒலி படத்தில் கமல் குடிபோதையில் கிணற்றின் மீது நடந்தபடி 'தகிட தகிட தகிட தந்தானா' என்று பாடும் காட்சிக்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பாடல் துவங்கும்போதே எம் எஸ் வியின் இசையில் வாத்தியக்  கருவிகள் (குடிபோதையில்!) தள்ளாடுகின்றன. ஹம்மிங்கில் போதை தெரிவதில் வியப்பில்லை. ஆனால் ஹம்மிங்கைத் தொடர்ந்து வரும் சீட்டியில் (விசில்) கூட  போதை தெரிவது வியப்பளிக்கிறது. விசில் அடித்தவர் அநேகமாக 'நெஞ்சத்திலே நீ நேற்று வாந்தாய்' பாடலில் விசில் அடித்த எம் எஸ் ராஜு (மாண்டலின் ராஜு)வாக இருக்கலாம். எம் எஸ் வியே விசில் அடிப்பதில்  பெற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

போதையுடன் ஒலிக்கும் பல்லவிக்குப் பின் வரும் வேகமான இசை நாகேஷின் அற்புதமான நடனத்துக்கு உதவும் வகையில் பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டபோது சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். கிராமஃபோன் இசைத்தட்டில் இந்த வேகமான இசை இடம் பெறவில்லை என்று நினைவு. சில வினாடிகளே வந்தாலும் நாகேஷின் நடன அசைவுகள் வியக்க வைப்பவை.

பாடல் இதோ



ஒரு சாதாரணப் படக் காட்சிக்கான பாடலை ஒரு அற்புதமான கலைப்படைப்பாக மாற்றுவது கண்ணதாசனுக்கும் எம் எஸ் விக்கும் ஒரு பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது!

இந்த இரு பாடல்களும் எனக்கு அளிக்கும் போதையிலிருந்து என்னால் எளிதில் விடுபட முடிவதில்லை. விடுபட நான் விரும்பியதும் இல்லை!





புதன், 28 பிப்ரவரி, 2018

38. பட்டுச்சிறகு விரிப்பும் முத்துப்பல் சிரிப்பும்!

சிறந்த ஓவியர்கள், கவிஞர்கள், பிற கலை இலக்கியப்  படைப்பாளிகள் ஆகியோரின் படைப்புகளை ஆராயும்போது கலை, இலக்கிய ஆய்வாளர்கள் (connoisseurs), ஒரு கலைஞனின் படைப்புகளுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டறிவார்கள்.

சில சமயம், ஒரு ஓவியம் யார் தீட்டியது என்பது தெரியாத நிலையில், அந்த ஓவியத்துக்கும், குறிப்பிட்ட ஓவியரின் பிற ஓவியங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து அந்த ஓவியத்தைத் தீட்டியவர் அந்த ஓவியர்தான் என்று முடிவு செய்வது பலமுறை நிகழ்ந்திருக்கிறது.

மெல்லிசை மன்னரின் சில பாடல்களுக்கிடையே இருக்கக் கூடிய சில பொதுவான இசை அம்சங்களை நான் கவனித்து வியந்திருக்கிறேன்.

ராகங்கள் பற்றிய அறிவு இல்லாத நிலையில் இசை ஆர்வம் கொண்ட ஒரு பாமர ரசிகனாகவே இந்த ஒற்றுமைகளை நான் கவனித்திருக்கிறேன்.
அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

ஒரே சந்தத்தில் அமைந்த பாடல்களுக்குள் இருக்கும் ஒற்றுமை வேறு. இது பற்றி நான் இன்னொரு பதிவில் எழுதியிருக்கிறேன். ஆனால் இங்கே நான் குறிப்பிடும் ஒற்றுமைகள் வேறு சந்தங்களில் அமைந்த பாடல்களுக்கிடையே உள்ள ஒற்றுமை.

ஏ எல் ராகவன் அவர்கள் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், ஒவ்வொரு பாடலும் முத்தான பாடல்! எங்கிருந்தாலும் வாழ்க, அன்று ஊமைப் பெண்ணல்லோ, கால்கள் நின்றது  நின்றதுதான், திங்களுக்கு இன்று என்ன திருமணமோ, காதல் என்றால் ஆணும் பெண்ணும், பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக்குருவி, இங்கே தெய்வம் பாதி  ஒன்று என்ற பல பாடல்களைக் குறிப்பிடலாம்.

இவற்றில் 1964ஆம் ஆண்டு வெளியான கருப்புப்பணம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக்குருவி ஒன்று' என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். ஏ எல் ஆர் மற்றும் எல் ஆர் ஈஸ்வரி இணைந்து பாடியுள்ள இந்தப்பாடல் பட்டுச் சிறகால் நம்  உடலை வருடுவது போல் நம் மனதை வருடி விட்டுச் செல்லும் இனிய தன்மை கொண்டது. 'பட்டு' என்ற சொல் பாடலில் இருந்தாலே அந்தப் பாட்டில் ஒரு அலாதியான மென்மையை (மேன்மையை)ப் புகுத்தி விடுவார் எம் எஸ் வி. 'பட்டிலும் மெல்லிய பெண் இது' என்ற பாடலிலும் இந்த மென்மையை உணர முடியும்.

முகப்பு இசையைக் கேட்டதுமே நமக்கு ஒரு ஈர்ப்பு  ஏற்படும். பிறகு பல்லவியைக் கேட்டால் இப்படி ஒரு ராகமா  என்று பிரமிக்கத் தோன்றும். இது போன்ற ஒரு நீளமான பல்லவிக்கு இப்படி ஒரு டியூன் போட மெல்லிசை மன்னர் ஒருவரால் மட்டுமே முடியும்! பிறகு வரும் இணைப்பிசை நம்மைப் பிடித்து இழுக்கும். சரணமோ பல்லவிக்குச் சவால் விடும் அளவுக்கு இருக்கும். இந்தப் பாடலில் இனிமையில் விஞ்சி நிற்பது பல்லவியா சரணமா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் இணைப்பிசை முதல் சரணத்துக்கு முன் வருவது போன்றதுதான் என்றாலும், இதில் ஒரு சிறிய ஹம்மிங்கைக் கொடுத்து  ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறார் மனிதர்! (இந்த ஹம்மிங் பலே பாண்டியா படத்தில் வரும் 'ஆதி மனிதன் காதலுக்குப் பின்' என்ற பாடலின் இறுதியில் வரும் ஹம்மிங்கை ஒத்திருப்பது இன்னொரு ஒற்றுமை!)

தென்றலைப்போல்சு நம்மைக் குளிர்விக்கும் சுகமான, இதமான, திகட்டாத பாடல் இது.


இப்போது 1973ஆம் ஆண்டு வந்த பூக்காரி படத்தில் இடம் பெற்றுள்ள 'முத்துப்பல் சிரிப்பென்னவோ' பாடலை எடுத்துக் கொள்வோம்.





இந்த இரண்டு பாடல்களையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாகக் கேட்டாலும் இரண்டு பாடல்களும் வெவ்வேறு தளத்தில் அமைந்ததாகத்தான் தோன்றும். ஆனால் இரு பாடல்களின் சரணங்களை மட்டும் கவனமாகக் கேட்டால் அவை ஒரே மாதிரி இருப்பதை உணர முடியும்.

இசை நுணுக்கங்கள் அறிந்தவர்களும், கீபோர்டில் பாடல்களை வாசிக்கும் திறன் பெற்றவர்களும் இரு பாடல்களுக்கும் உள்ள மற்ற ஒற்றுமைகளைக் கண்டறிய (கேட்டறிய)க்  கூடும். நான் குறிப்பிட்டிருப்பது மேலோட்டமாக எனக்குப் புலப்பட்ட ஒற்றுமையைத்தான்.

சனி, 17 பிப்ரவரி, 2018

37. பொன் ஒன்று கண்டேன்

1962ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் 'படித்தால் மட்டும் போதுமா.'

பாலாஜி, சிவாஜி இருவரில், அண்ணன் பாலாஜி படித்தவர், தம்பி சிவாஜி படிக்காதவர். இருவருக்கும் முறையே படித்த பெண்ணான ராஜசுலோசனா, படிக்காத பெண்ணான சாவித்திரி ஆகிய இருவரையும் மணமுடிக்க அவர்கள் பெற்றோர் உத்தேசித்து, பெண் பார்க்க ஏற்பாடு செய்யம்போது சகோதரர்கள் இருவரும் பெண் பார்க்க வெட்கப்படுவதால்(!), அண்ணனுக்குப் பார்த்த பெண்ணைத் தம்பியும், தம்பிக்குப் பார்த்த பெண்ணை அண்ணனும் பார்ப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.

அதுபோல் இருவரும் பெண் பார்த்து விட்டு வந்த பிறகு தாங்கள் பார்த்த பெண்ணைப் பற்றி வர்ணித்துப் பாடும் பாடல் இது.

இதற்கிடையே சிவாஜிக்குப் பார்த்த சாவித்திரியினால் கவரப்பட்ட பாலாஜி அவளைத் தானே திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு, தன்னைப்  பற்றித் தவறான எண்ணம் ஏற்படும் விதத்தில், தனக்குப் பார்க்கப்பட்ட பெண்ணான ராஜசுலோசனாவின் வீட்டுக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அனுப்புகிறார்.

பாலாஜி, சிவாஜி இருவரின் மனநிலையையும் பிரதிபலிக்கும் வகையில் அங்கங்கே மறைபொருளாகச் சில விஷயங்களை வைத்து இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் கவிஞர்.

விஸ்வநாதன் ராமாமூர்த்தியின் இசையில் மனதை வருடிக் கொடுப்பது போல் அலாதியான இனிமையுடன் அமைந்திருக்கும் இந்த அற்புதமான பாடல் பிருந்தாவன சாரங்கா ராகத்தின் சாயலில் அமைந்திருப்பதாகச் சொல்வார்கள். 'ராகத்தின் சாயலில்' என்று நான் சொல்வதற்குக்  காரணம்,  சுப்புடு அவர்கள் கூறியது போல்  எம் எஸ் வியின் பாடல்கள் பெரும்பாலும் அவரது சொந்த ராகத்தில் அமைந்தவை என்பதுதான்!

பாடலில் கவிஞர் வைத்திருக்கும் உட்பொருளையும், எம் எஸ் வியின் நுணுக்கமான இசைச் செதுக்கல்களையும் பார்க்கலாம்.

(பாடலின் சில வரிகளில் மட்டும் - நான் கருத்துத் தெரிவித்திருக்கும் வரிகளில் மட்டும் - பாடியவர் சிவாஜி/பாலாஜி என்று குறிப்பிட்டிருக்கிறேன்.)

பல்லவி
சிவாஜி: பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
(தான் பார்த்தது தனக்கு அண்ணியாக வரப்போகிற பெண் என்பதால், அந்தப் பெண்ணைப் பற்றித் தான் வர்ணிப்பது முறையாகுமா என்ற பொருளில் 'சொல்லலாகுமா?' என்கிறார்.)

பாலாஜி: என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?
(மேலோட்டமாகப் பார்த்தால் 'அவளைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.' என்று பொருள் வரும்.  ஆனால் இதன் உட்பொருள் "நான் ஏன் அவளைப் பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும்? அவளைத்தான் நானே கல்யாணம் செய்து கொள்வது என்று முடிவு செய்து விட்டேனே!')

பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
என்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்காரச் சின்னம்
அலை போல மின்னும்
(அலை என்ற சொல் உச்சரிக்கப்படும் விதத்தைக் கேளுங்கள்!)

நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
வெள்ளி நிலா
('துள்ளி வரும்' என்ற சொற்களே துள்ளி விழும் அழகை மெல்லிசை மன்னரின் இசையில்தான் காண முடியும்!)

துவண்டு விழும்
கொடி இடையாள்
(சொற்களே துவள்கின்றனவே!)

விண்ணோடு விளையாடும் பெண்
அந்தப்  பெண் அல்லவோ
(விண்ணோடு என்ற வார்த்தையில் மேல் தொனியில் துவங்கும் இசை படிப்படியாகக் கீழே இறங்கி பெண் அல்லவோ என்ற இடத்தில் கீழே வந்து விடுகிறது! விண்ணையும், மண்ணில் இருக்கும் பெண்ணையும்  இணைக்கும் ஒரு சாய்தளம் போல் அமைந்திருக்கிறது இந்த வரி. இந்த வரியின் இசை சிவாஜியின் உடல் அசைவுக்கு  எந்த அளவுக்கு உந்துதலாக இருக்கிறது என்பதைக் காட்சியில் பார்க்கலாம். சிவாஜி நீச்சல் குளத்தின் படிகளில் ஏறி  உயரமான இடத்துக்கு வந்து விண்ணோடு என்ற வரி வரும்போது கையை உயர்த்திப் பிறகு கையைப் படிப்படியாக இறக்குகிறார். அவரது இந்த அசைவை இயக்குவது இந்த வரியின் இசைதான் என்பதை இந்தக் காட்சியைப் பார்க்கும் எவரும் உணர முடியும். 'புதையல்' படத்தில் வரும் 'விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே என்ற பாடலில் விண், முகில், நிலவு மூன்றுமே ஒரே தளத்தில் இருப்பதால் - விஞ்ஞான ரீதியாக அல்ல! -  அந்த வரி ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரே சீராக இருப்பதை,விண்ணோடு விளையாடும்...' என்ற இந்த வரியுடன் ஒப்பிட்டால் எம் எஸ் வி வார்த்தைகளுக்குக்  கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்)

சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…
(ஜூலியஸ் சீசரைப் பற்றிய came, saw and conquered (veni, vici, vidi in Latin) என்ற வரிகளைப் பின்பற்றிக் கவிஞர் இதை எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.)

சிவாஜி: நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

பாலாஜி: உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை
(எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்ற எண்ணத்தில்  நீ பார்த்தது போல் நான் பார்க்கவில்லை! நான் அவளை என் மனைவியாக நினைத்துத்தான் பார்த்தேன்!)

என் விழியில்
நீ இருந்தாய்
(என் விழி மூலம் பார்த்தது நீதான் என்கிறார் சிவாஜி. தான் பார்த்ததாக அவர் சொல்லவில்லை )

உன் வடிவில்
நான் இருந்தேன்
(சிவாஜி 'நீ' என்று சொன்னதற்கு மாறாக பாலாஜி 'நான்' என்கிறார்.  'நான்' என்ற சொல்  அவருடைய சுயநலத்தையும், உள் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது!)

 நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பான அம்சம் தாளம். பாடல் துவங்கும்போது இருவரும் நீச்சல் குளத்தில் குளிக்கிறார்கள். அதனால் துவக்கத்தில் தாளம் ஒலிப்பது போல் தெரியாமலே ஒலிக்கிறது. அவ்வப்போது நீர்ப்பரப்பின் மீது நீர் சொட்டும் ஓசை போன்ற ஓசை பின்னணியில் மெலிதாகக் கேட்கிறது. சிறிது சிறிதாகத்  தாள ஒலி அதிகரிக்கிறது. முதல் சரணத்தின் இடையிலேயே, இருவரும் குளத்திலிருந்து ஏறி  வந்து விடுகிறார்கள். அப்போது தாளம் சற்று எடுப்பாக ஒலிப்பதை கவனிக்கலாம். ஸ்டீரியோ வசதிமில்லாத காலத்தில் இத்தனை நுணுக்கங்களைச் செய்திருக்கிறார் மெல்லிசை மன்னர்!

பாடலின் ராகம், பின்னணி இசை ஆகியவற்றின் அருமையை விவரிக்க இசையறிவு வேண்டும். அது எனக்கு இல்லை. அதனால் தென்றல் போல் மென்மையாக வந்து தழுவும் முகப்பிசையையும், இரண்டாவது சரணத்துக்கு முன்பு வரும் ஷெனாய் இசையையும் மட்டும் குறிப்பிட்டு விட்டு என் ரசிப்புரையை முடித்துக் கொள்கிறேன்.






சனி, 12 ஆகஸ்ட், 2017

36. உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது

'பழனி' படத்தில் இடம் பெறும் 'உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா' என்ற இந்த டூயட் ஒரு எளிய கிராமிய அல்லது நாட்டுப்புறப் பாடல். Folk song என்ற பெயரில் மேற்கத்திய வாடை வீசுவதால், இந்தப் பெயரை நான் விரும்புவதில்லை. Folk song என்ற பெயரை மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளட்டும்!

மெல்லிசை மன்னரின் பாடல்களை நாட்டுப்புறப்  பாடல்கள் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டுப்புறப் பாடல் என்றால் பாடல் வரிகள், ராகம், இசைக்கருவிகள் எல்லாமே நாட்டுப்புறத்துக்கு உரிய எளிமையுடனும் இனிமையுடனும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இந்தப்பாடல்.

எனக்கு இசைக்கருவிகளைப் பற்றிய அறிவு கிடையாது. இந்த சுகமான பாடலில், பல்லவி முடிந்து அனுபல்லவி துவங்குமுன் வரும் இசை, தண்ணீர் பொங்கி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இடையிசை வயல்களிலும், வாய்க்கால்களிலும்  தண்ணீர் ஓடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இவையெல்லாம் என் மாணவப் பருவத்தில் இந்தப் படலைக் கேட்டபோதே ஏற்பட்ட உணர்வுகள்!

மிக மிக இனிமையான ட்யூன். வேகமாக நகர்ந்து செல்லும் பாடல். 'சொல்லால் சொன்னால்' என்ற ஒரே மாதிரி தொனிக்கும்  இரு வார்த்தைகளில் 'சொன்னால்' என்ற வார்த்தையில் கூடுதல் இனிமையையும், கொஞ்சலையும் சேர்த்திருக்கும் மெல்லிசை மன்னரின் முத்திரைப் பதிப்பு. ஆஹா! தெளிவான நீரோட்டம் போல் என்னவொரு அருமையான பாடல்!

பல்லவிக்குப் பின்னால் 'ஆஹஹாஹா அஹஹா......' என்ற short hammingஇன்  மூலம் வெவ்வேறு தளங்களில் அமைந்துள்ள சரணத்தையும் பல்லவியையும் இணைக்கும் லாகவம்!

இது ஒரு கனவுப்  பாடல். 'கனவு முடிந்து விட்டது எழுந்திரு' என்று கதாநாயகியை மெல்லத் தட்டி எழுப்புவது போல் ஒரு அருமையான முத்தாய்ப்பு இசையுடன்  முடிகிறது பாடல்! Typical MSV way of signing off!

கிராமஃபோன் இசைத்தட்டில் மூன்று சரணங்கள் உண்டு. 'வாழைத்தோட்டம் போட்டது போல்' என்ற இரண்டாவது சரணம் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. கீழே முதலில் கொடுக்கப்பட்டுள்ள ஆடியோ பதிவில்   மூன்று சரணங்களையம் கேட்கலாம். இரண்டாவது சரணத்தில் மாறுபட்ட இடையிசை அமைக்கப்பட்டிருப்பதையும்  ரசிக்கலாம்.

1. கிராமஃபோன் இசைத்தட்டு வடிவம்
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது  - பழனி - 1965

2. திரைப்பட (வீடியோ) வடிவம்





வியாழன், 10 ஆகஸ்ட், 2017

35. எம் எஸ் வியின் தூக்கத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!


பெரிய இடத்துப்பெண் படத்துக்கு ஒரு பாடல் அமைக்க வேண்டும். இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் கண்ணதாசனுக்காக வெகு நேரம் காத்திருந்து விட்டு, அவர் வராததால் வீட்டுக்குப் போய் விட்டார்கள். அவர்கள் போய்ச் சற்று நேரம் கழித்துக் கண்ணதாசன் வந்தார். அன்றே பாடலை எழுதி முடித்து விடலாம் என்று நினைத்து, MSVஐ வரச்சொல்வதற்காக அவர் வீட்டுக்கு ஃபோன்
செய்தார். MSV தூங்கி விட்டார் என்று தகவல் வந்தது.

கண்ணதாசன் தன் உதவியாளரை வைத்துக்கொண்டு பாடலை எழுதி முடித்தார். பாடலை ஸ்டூடியோவில் ஒருவரிடம் கொடுத்து, 'பாட்டு எழுதி விட்டேன். விஸ்வநாதன் வந்ததும் டியூன் போடச் சொல்லுங்கள்' என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

அவர் எழுதிய பாடல்;

"அவனுக்கென்ன தூங்கி விட்டான். அகப்பட்டவன் நான் அல்லவா!'

(குறிப்பு MSVஐ விட மூன்று வயது மூத்தவராகிய கண்ணதாசன் அவரை 'வாடா போடா' என்றுதான் பேசுவார்.)

இந்த நிகழ்ச்சியை மெல்லிசை மன்னரே பல முறை வானொலி/தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சொல்லாயிருக்கிறார்.

இந்தப் பாடலில் 
இதயத்தையும் கொடுத்து விட்டு 
இறக்கும் வரை  வரை துடிக்க விட்டான் 

என்ற வரிகள் அற்புதமாக அமைந்திருக்கின்றன.



பாடல் இதோ!




வியாழன், 20 ஜூலை, 2017

34. சூழல் ஒன்று - பாடல் இரண்டு

ஒரு ஊமைப்பெண்ணிடம் அவள் கணவன் தன்  காதலைச் சொல்லும் இரண்டு திரைப்படப் பாடல்கள். - ஒன்று 1966இல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வந்த கொடிமலரில் இடம்பெற்ற 'மௌனமே பார்வையால்' என்ற பாடல். மற்றொன்று பத்து வருடங்களுக்குப் பிறகு வந்த 'வாழ்வு என் பக்கம்'   படத்தில் இடம்பெற்ற 'வீணை பேசும்'  என்ற பாடல்.

கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் வந்த இரண்டு பாடல்களுமே ஒரே கருப்பொருளைக் கொண்டிருந்தாலும், இரண்டுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.

முதலில் 'மௌனமே பார்வையால்' பாடலை எடுத்துக் கொள்வோம். இந்தப் பட நாயகியால் எந்த ஒரு ஒலியையும் எழுப்ப முடியாது. மாறாக 'வீணை பேசும்' நாயகியால் 'ம்ம்ம்ம்ம் ..' என்று ஹம்மிங்காவது செய்ய முடியும்.

அதனால்தான் கொடிமலர் பாடலை

'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்'

என்று துவங்குகிறார் கவிஞர். பாட்டுப் பாடச் சொன்னால் நாணத்தினால் தயங்குவது எவருக்குமே இயல்பு. இந்தப் பெண் பார்வையால் பாட்டுப் பாடுவதற்குக் கூட நாணப்படுவாளோ என்று நினைத்து, அப்படி நாணப்பட்டால், ஜாடை மூலம் ஒரு (ஓரிரு) வார்த்தையாவது என்னிடம் பேசு என்கிறான் நாயகன். அவளால் பேச முடியாதது தனக்கு ஒரு பொருட்டே இல்லை, அவள் பார்வையாலும், ஜாடையாலும் பேசுவதே தனக்கு இன்பம்தான் என்று உணர்த்துகிறான்.

(வாழ்வு என் பக்கம் நாயகியால் ஒலி எழுப்ப முடியம் என்பதால் வீணை தென்றல் போன்ற மென்மையான ஒலி எழுப்பும் பொருட்களை அவள் பேச்சுக்கு இணையாகக் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர். மெல்லிசை மன்னரும் நாயகி ஹம்மிங் செய்வதாக அமைத்திருக்கிறார்.)

இப்போது சரணத்துக்கு வருவோம்.

அல்லிக்கொடியே உந்தன்
முல்லை இதழும் 
தேன் ஆறு போலப் பொங்கி
வர வேண்டும்.

பொதுவாக இதழ் தேனாறு போலப்  பொங்கி வர வேண்டும் என்றால் இனிமையான சொற்கள் அவள் வாயிலிருந்து வரவேண்டும் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் இங்கே நாயகியால் பேச முடியாது என்பதால் நாயகியின் இதழைச்  சுவைக்க வேண்டும் என்ற நாயகனின் விருப்பத்தையே இது குறிக்கிறது. இதன் மூலம் அவளிடம் அவனுக்கு இருக்கும் உடல் ரீதியான கவர்ச்சியை அவன் வெளிப்படுத்துகிறான்!

அங்கம் தழுவும் வண்ணத்
தங்க நகை போல் 
என்னை அள்ளிச் சூடிக்
கொண்டு விட வேண்டும்.

'நான் உன்னைத்  தாங்கிக்கொள்கிறேன்' என்று சொல்லாமல்  'நீ என்னைச் சூடிக்கொள்ள வேண்டும் 'என்று கூறுவதன் மூலம் அவள் பலவீனமானவள் அல்ல, அவளை யாரும் தாங்கிப் பிடிக்க வேண்டியதில்லை என்பதை அவளுக்கு உணர்த்துகிறான். 'உடலைத்தழுவும் நகைபோல் என்னை நீ சூடிக்கொள்ள வேண்டும்'  என்ற வரியும் முந்தைய வரி உணர்த்திய அவள் உடற்கவர்ச்சியை உறுதி செய்கிறது.

முத்துச் சரமே என்

பக்கம் இருந்தால் 
வேறென்ன வார்த்தை
சொல்ல மொழி வேண்டும்?

நீ பேசாதது எனக்கு ஒரு குறையல்ல. நீ என் அருகில் இருந்தாலே போதும். பேச்சு எதற்கு?

முன்னம் இருக்கும் உன்
சின்ன முகத்தில் 
பல மொழிகள் பாடம் பெற
வர வேண்டும்!

ஆஹா! ஜாக்பாட்  அடித்திருக்கிறார் கவிஞர்.  வாயால்  பேச  முடியாததால் அவள் முகபாவங்களினால்தானே பேச முடியும்? அவள் தன் முகபாவங்களினால் பேசும் பேச்சு இருக்கிறதே,  அந்தப் பேச்சை முழுமையாக எழுத்தில் வடிக்க மொழிகளால் முடியாது. ஏனெனில் எந்த மொழியிலும் அவ்வளவையும் எழுத்தில் வடிக்கும் அளவுக்குச் சொல்வளம் இல்லை. எனவே மொழிகள் இவள் முகத்தை பார்த்து, இவள் முகபாவங்களைப்  படித்து நிறையப்  பாடம் கற்க வேண்டுமாம்!

தன்னால் பேச முடியவில்லையே என்று நினைக்கும் ஒரு பெண்ணுக்கு அவள் கணவனிடமிருந்து இதைவிடச் சிறப்பான பாராட்டோ, அங்கீகாரமோ இருக்க முடியுமா?  பேச முடியாத குறையை எவ்வளவு சிறப்பான  நிறையாக மாற்றி விட்டார் கவிஞர்!

பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்.


இப்போது இரண்டாவது பாடலுக்கு வருவோம். இங்கே கவியும், இசையும் வேறு பரிமாணங்களில் மிளிர்கின்றன.

நாயகியால் ஒலி எழுப்ப முடியும் என்பதால் 'வீணை பேசும்' என்று துவங்கியிருக்கிறார் கவிஞர்.

வீணை பேசும் 
அது மீட்டும் விரல்களைக் கண்டு 
தென்றல் பேசும் 
அது மோதும் மலர்களில் நின்று 

வீணை பேசும். யாரிடம்? அதை மீட்டும் விரல்களிடம். மற்றவர்களிடம் அது பேசாது என்பதால் வீணைக்குப் பேசத் தெரியாது என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் வீணையை மீட்டும் விரல்களுக்குத் தெரியுமே (புரியுமே) அது தன்னிடம் பேசுவது!

இதே போல்தான் தென்றலும். தென்றல் மலர்களின் மீது நின்று அவற்றை உரசியபடியே பேசுவதால் தென்றல் பேசுவது மலர்களுக்குத்தான் தெரியும் (புரியும்). மற்றவர்களுக்கு அதன் ம்ம்ம்ம் என்ற ரீங்காரம் மட்டும் வேண்டுமானால் கேட்கலாம்.

அதேபோல் நாயகி 'பேசுவது  நாயகனுக்கு கேட்கும் புரியும். நாயகி ம்ம்ம்ம்  என்று ஒலி எழுப்புவதைக் குறிக்க மென்மையாக ஒலிக்கும் வீணையையும், தென்றலையும் உவமையாகச் சொல்லி இருப்பது எவ்வளவு இயல்பாக, சிறப்பாக இருக்கிறது! பாடலின் இடையிலும், இறுதியிலும்  மெல்லிசை மன்னர் அமைத்திருக்கும் ஹம்மிங்கைக் கேட்டால் இந்த உவமானங்களுக்கு அவர் ஒலி வடிவம் கொடுத்திருப்பதை புரிந்து கொள்ளலாம்.

நாணம் ஒருவகைக் கலையின் சுகம் 
மௌனம் ஒருவகை மொழியின் பதம் 

பதமான, சுகமான கவிதை வரிகள்! நாணம் பெண்களுக்கே உரித்தான தனிக்கலை! ஆண்களுக்கு அது ஒரு சுகம். மௌனம் ஒரு மொழி - பதமான மொழி. ஆங்கிலத்தில் silence is a subtle language என்பதின் பதமான தமிழ் வடிவம் இது என்று கொள்ளலாம். நாயகி மௌனம் என்ற பதமான மொழியில் பேசும்போது, அவளுக்குப் பேச்சு வராது என்று எப்படிச் சொல்ல முடியும்? நாயகியால் பேச முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அடித்துச் சொல்கிறான் நாயகன்.

தீபம் எப்போது பேசும் கண்ணே? தோன்றும் தெய்வத்தின் முன்னே 
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே?

சாதாரணமாக வீட்டில் வெளிச்சத்துக்காக ஏற்றி வைத்திருக்கும் தீபத்துக்கும் தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைத்திருக்கும் தீபத்துக்கும் வித்தியாசம் உண்டு. தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபத்துக்கு மதிப்பும் மரியாதையும் உண்டே! தெய்வத்தை நம் கண்களுக்கு காட்டுவதே அந்த தீபம்தானே! 'நீ தெய்வத்தின் சந்நிதியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபம்.'

தெய்வம் பேசாது. ஆனால் தெய்வத்தின் முன்னே ஏற்றி வைத்திருக்கும் தீபம் பேசும்.(தன்  ஒளியின் மூலம் நம்மை எல்லாவற்றையும் காணச்  செய்யும்.) நீயும் தெய்வமாய் இருந்து  எனக்குப் பல விஷயங்களை உணர்த்துவாய்.

இரண்டாவது சரணத்தில் அது முதல் இரவு என்பதை நினைவு படுத்துகிறான் நாயகன்.

காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் தெரிவது கவிதைக்கலை.
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே 
வாழ்வில் ஒன்றான பின்னே

வார்த்தை இல்லாத சரசம் இருவரும் காதலில் ஒன்று சேர்வதைக் குறிக்கிறது. இங்கே பேச்சு ஒரு பிரச்னையே இல்லை!

தாய்மை கொண்டாடு

நீ ஒரு தாய் ஆனதும் உனக்கு உன் குறை தெரியாது. (அதை நீ மறந்து விடுவாய்)

பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே!

ஆனால் இதற்குப் பல மாதங்கள் ஆகுமே! அதுவரை என்னையே குழந்தையாக நினைத்து உன் நெஞ்சில் அனைத்து என்னைத் தாலாட்டு.

இந்த இடத்தில் மெல்லிசை மன்னர் தாலாட்டு போன்ற ஒரு ஹம்மிங்கை கதாநாயகி பாடும்படி அமைத்திருக்கிறார். கதாநாயகனும் இந்த ஹம்மிங்கில் இணைந்து கொள்ள,  பாடல் முடிகிறது.

தாலாட்டுக்குப் பிறகு இருவரும் உறங்கி விடுவார்கள் என்பதால் வழக்கமாக எல்லாப் பாடல்களிலும் வருவதுபோல் மீண்டும் பல்லவியைப் பாடச் செய்யாமல் பாடலை இந்த இடத்தில் முடித்து விடுகிறார் மெல்லிசை மன்னர். பாடல் வரிகளைக் கூர்ந்து படித்து அவற்றின் பொருள் அறிந்து இசை அமைக்கும் எம் எஸ் வியின் பாணிக்கு இது இன்னும் ஒரு சான்று.

பாடலைக்  கேட்டு நீங்களும் கொஞ்ச நேரம் மெம்மறந்து இருங்களேன்!