ஞாயிறு, 27 ஜனவரி, 2013

19. ஆயிரம் பெண்மை மலரட்டுமே



ஆயிரம் பெண்மை மலரட்டுமே
படம்: வாழ்க்கைப்படகு
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: எம்.எஸ்.வி, பி.சுசிலா மற்றும் குழுவினர்

'ஆயிரம் பெண்மை மலரட்டுமே' பாடல் கவிஞரின் அனாயாசமான சொல் வீச்சுக்கும், மெல்லிசை மன்னரின் சளைக்காத இசை வீச்சுக்கும் ஒரு நல்ல உதாரணம்.

முழுப் பாடல் இதோ.

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய்ச் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்.

மன்னவனே ஆனாலும்
பொன்னளந்து கொடுத்தாலும்
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும்
வெஞ்சிறையில் போட்டாலும்
உடல் அன்றி உள்ளம் உன்னைச் சேராது
ஆ..ஆ.ஆ....
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மன்னா நில் நில் நில்

இந்தப் பாடலைக் கேட்கும்போது, கேட்பவர்களைக் கட்டிப்போட வைக்கும் ஒரு ஆற்றல் இந்தப் பாடலுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றும். 'கொஞசம் நில். இதைக் கேட்டு விட்டுப் போ!' என்று கட்டளையிடுகிற தொனியை இப்பாடலில் என்னால் உணர முடிகிறது.

நாட்டியமாடும் ஒரு பெண் தன்னைப் பற்றி உலகுக்கு அறிவிக்கும் பாடல் இது. பொதுவாக நாட்டியம் ஆடும் பெண்களை அடையப் பலர் நினைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிற நிகழ்ச்சி.(கதைகளிலும், திரைப்படங்களிலும் அப்படித்தானே காட்டுகிறார்கள்!) 'ஆனால் நான் அப்படி இல்லை, என்னிடம் யாரும் நெருங்க வேண்டாம்' என்று இங்கே கதாநாயகி அறிவிக்கிறாள். சாதாரணமாகச் சொன்னால் போதாது, அடித்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பது போல் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் கவிஞர்.

பாடலின் துவக்கம் ஆர்மோனிய இசையுடன் துவங்கும்போது, பாடல் வரிகளை எடுத்துக் கொடுத்திருப்பது மெல்லிசை மன்னரின் குரல். மிக இளமையாக ஒலிக்கும் அந்தக் குரல் அவருடைய பிற்காலப் பாடல்களில் ஒலித்த குரலுடன் ஒப்பிடும்போது அடையாளம் காண முடியாததாக இருக்கிறது. (ஒருவர் இது வீரமணியின் குரல் என்று You Tube இல் குறிப்பிட்டிருக்கிறார்!)

முதல் சரணத்தில் பொதுவாகப் பெண்களின் மன இயல்பைப் பற்றிச் சொல்கிற கதாநாயகி, இரண்டாவது சரணத்தில் தன்னைப் பற்றிப் பேசுகிறாள். ஒரு மன்னன் அவளை அடைய நினைக்கும்போது அவனைத் துச்சமாகப் பேசுகிறாள். மன்னன் வருவதற்கான கட்டியம் இரண்டாவது சரணத்தின் முந்தைய இடை இசையில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. இசைத்தட்டுகளில் இது இடம் பெறாததால் பல வருடங்களுக்க்ப் பிறகு ஒளிக்காட்சியில் இதைக் கேட்டபோது எனக்கு வியப்பு ஏற்பட்டது.

'மன்னவனே ஆனாலும்..' என்று துவங்கும் விருத்தம் இரண்டாவது சரணத்தின் துவக்கத்தில் வருகிறது. 'இதை முக்கியமாக எல்லோரும் கவனிக்கவேண்டும்' என்று அறிவிப்பதுபோல், இந்த விருத்தம், சற்றே மெதுவான நடையில், தாளப் பின்னணி இல்லாமல் தொகையறா போல் ஒலிக்கிறது. மெதுவான நடையில் வரும் இந்த விருத்தத்தை வேகமான கதியில் வரும் 'மானும் பெண்ணும் ஒரு ஜாதி. என்ற சரணத்தின் இரண்டாவது பகுதியுடன் ஒரு ஹம்மிங் மூலம் இணைதிருப்பது ('seamless fusion ) மெல்லிசை மன்னருக்கு மட்டுமே கை வந்த ஒரு கலை.

'சொல், சொல், சொல்' என்ற வரிகளின் பொருள், 'இதை எல்லோருக்கும் போய்ச் சொல்' என்பதுபோல் உறுதியுடனும், அதிகாரத்துடனும் சொல்லப்படுவதை இசை உணர்த்துகிறது.

இதே 'சொல், சொல், சொல்' வேறு இரண்டு பாடலளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

'சொன்னது நீதானா,
சொல், சொல், சொல் என்னுயிரே .'
('சொன்னது நீதானா" - நெஞ்சில் ஓர் ஆலயம்)

இங்கே, 'நீ இப்படிச் சொல்லலாமா?' என்ற ஆதஙகமும், காயப்பட்ட உணர்வும் வெளிப்படுகிறது.

'என் மனத் தோட்டத்து வண்ணப்பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்.'
('பொன்னெழில் பூத்தது புது வானில்' - கலங்கரை விளக்கம்)
இங்கே தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு ஒலிக்கிறது.

இந்த மூன்று இடங்களையும் ஒப்பிட்டால், மெல்லிசை மன்னர் எப்படி 'சொல்'லுக்கு உயிர் கொடுக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ரகுவம்சத்தின் துவக்கத்தில் காளிதாசன், பார்வதியும் பரமேஸ்வரனும் சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். கவிஞரும், மெல்லிசை மன்னரும் கூட, சொல்லும் பொருளும் போல் இணைந்திருப்பதைப் பல பாடல்களில் நாம் காணலாம்.

'சொல்லின் ராஜ்ஜியம் உனது அந்த
இசையின் ராஜ்ஜியம் எனது'
என்று மெல்லிசை மன்னர் 'சொல்'லாமல் 'சொல்'லி இருக்கிறார்.

பாடலை இங்கே பார்த்தும் கேடும் மகிழலாம்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே


Originaaly posted in MSVTimes.com/forum  on 28th Jan, 2013.

சனி, 28 ஜூலை, 2012

18. பாடவா டூயட் பாடலை - ஒரு அலசல்

கடந்த சில வாரங்களாக*, தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களில் மெல்லிசை மன்னரின் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. இதன் உச்சக் கட்டம்தான் 'பாடவா டூயட் பாடலை' நிகழ்ச்சியில், நம் எம்.எஸ்.வி 'மெல்லிசை மன்னராகப்' பங்கேற்றது. இந்நிகழ்ச்சி பற்றிய கருத்துப் பரிமாறல்கள் நமது அரங்கில்** நிகழ்ச்சி தொடங்கிய உடனேயே துவங்கி விட்டன.

இந்நிலையில் நண்பர் முரளி இந்நிகழ்ச்சி பற்றி சற்றே விரிவாக அலச வேண்டும் என்று விரும்பினார். இதை இருவர் விவாதித்துக் கலந்து எழுதினால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தில் நாங்கள் இருவரும் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். (என்னைப் பொறுத்தவரை இசையைப் பற்றி நான் 'விவாதிப்பது' என்பது திருவிளையாடல் தருமி போல் கேள்விகள் கேட்பது தான்!) எப்போதும்போல் மற்ற நண்பர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து இந்த அலசலுக்கு வளம் சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

முதல் நாள் (22, ஆகஸ்ட், 2011)
'பாடவா பாடலின்'  'எதிர்பாராத சுற்றில்' 14 இணைகள் பங்கேற்றார்கள். அவர்கள் பாடுவதற்காக, நிகழ்ச்சியின் துணை இயக்குனர் மோகன் எழுதிய 14  பல்லவிகளுக்கு மெல்லிசை மன்னர் மெட்டுப் போட்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்துப் பாட வைப்பது நிச்சயமாக ஒரு சவாலான முயற்சிதான்.

முதல் இணை : அஸ்வின், சரயு. இவர்கள் முதலில் எம் எஸ் வியின் திரைப்படப் பாடலைப் பாடித் தங்களைத் தயார் படுத்திக் கொண்டபின், புதிய பாடல் வரிகள் எம் எஸ் விக்குக் கொடுக்கப் பட்டு, அவர் அதற்கு உடனே மெட்டுப் போட்டு இவர்களைப் பாட வைக்க வேண்டும் என்று தொகுப்பாளர் சுஹாசினி விளக்கினார். இந்த முதல் இணை பாடிய பாடல்: பூமாலையில் ஓர் மல்லிகை (ஊட்டி வரை உறவு) 

பிறகு எம் எஸ் வி இசை அமைக்க வேண்டிய பாடல் வரிகளை சுஹாசினி படித்துக் காட்டி,  பாடலை அவரிடம் கொடுத்தார். சுஹாசினி பாடலைப் படிக்கும்போதே அதை உள்வாங்கிக் கொண்டு, பின்னால் இருந்த தபேலா கணபதிக்குத் தாள கதி என்ன என்று சொல்லி விட்டு ஆர்மோனியத்தில் சுருதி சேர்த்துக் கொண்டே பாடவும் துவங்கி விட்டார் மெல்லிசை மன்னர்.  
பாடல் வரிகள் இதோ:

காதலி:  
கனாவென வந்து போகிறாய்
வினாவென வளைந்து போகிறேன்
ஒரு துளியைப்போல விழுந்த கனவு
அலைகளானதே
உன் விழிகள் இரண்டும்
உயிரைச் சுருட்டும் வலைகளானதே

காதலன்: 
கனாவென வந்து போகிறாய்
வினாவென வளைந்து போகிறேன்
ஒரு விதையைப்போல விழுந்த நினைவு
விருட்சமானதே
நீ சிந்தும் சிரிப்பில் இருண்ட உலகும் 
வெளிச்சமானதே.

இனி நிகழ்ச்சி பற்றிய எங்கள் உரையாடலின் தொகுப்பு.

முரளி: இவர்கள் பாடிய 'பூமாலையில்' மெட்டை ஒட்டியே இந்தப் பல்லவிக்கு மெட்டமைத்திருக்கிறார் எம் எஸ் வி.

நான்: ஏன் அப்படி? 

முரளி: போட்டியாளர்கள் பாடிய மெட்டுப் போலவே அமைந்தால் அவர்களுக்குப் பாடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக இருக்கலாம். இவர்கள்   முதலில் பாட வருவதால் கொஞ்சம் படபடப்பாக இருப்பார்கள் என்பதாலும் இருக்கலாம்.

நான்: ஒரு புதிய பல்லவியை எப்படி 'பூமாலையில்' மெட்டில் இசை அமைக்க முடியும்? இவர்கள் 'பூமாலையில்' பாடலைப் பாடியதே திட்டமிட்டுச் செய்யப்பட்டதுபோல் தோன்றாதா?

முரளி: அப்படி இல்லை. இந்த மெட்டை எடுத்துக் கொள்வது அவருக்கு இயல்பானதாகத் தோன்றியிருக்கும்.

நான்: அப்படியானால், எம் எஸ் வி விரும்பியிருந்தால் இந்தப் பல்லவிக்கு வேறு மெட்டிலும் இசையமைத்திருக்க முடியும் என்கிறீர்களா?

முரளி:  நிச்சயமாக. 

நான்: பாடகர்கள் பாடிய ஒரு பாட்டை ஒட்டியே ஒரு புதிய பாடலுக்கு மெட்டுப் போடுவது என்பது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. அவர் எப்படி விரும்புகிறாரோ அப்படி அப்படிப் போடுவார் போலிருக்கிறது! 

முரளி: அப்படியேதான். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. இவர்கள் முதலில் பாடியதை வைத்து, இவர்கள் குரல் வளம் எப்படி, இவர்களால் எந்த ரேஞ்சுக்குப் பாட முடியும் என்பதையும் தீர்மானித்து எம் எஸ் வி டியூன் போட்டிருப்பார் .

 நான்: ஓ! ஆச்சரியமாக இருக்கிறது. அறிமுகமான பாடகர்களாக இருந்தால் அவர்கள் குரல் வளம் எப்படி என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். அதற்கேற்ப இசை அமைத்திருப்பார்.  புதிய பாடகர்கள் என்பதால், அவர்கள் குரல் வளத்தை அறிந்து (அளந்து) அதற்கேற்றாற்போல் மெட்டைமைக்கிறார். 'பட்டத்து ராணி' பாடலை சுசீலா பாட வேண்டும் என்று ஸ்ரீதர் விருப்பம்   தெரிவித்தபோது, 'இது எல் ஆர் ஈஸ்வரிக்காகப் போட்ட பாடல். சுசீலாதான் பாட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்தப் பாட்டுக்கு நான் வேறொரு டியூன்தான் போட வேண்டும் என்று எம் எஸ் வி உறுதியாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது.  

முரளி: அப்படித்தான். வேறொரு இசையமைப்பாளரின் ஒரு பிரபலமான பாடலில் ஒரு இடத்தில் பாடகி உச்சத்தைத் தொட முடியாமல் திணறுவதை  நீங்கள் கவனித்திருக்கலாம். பாடகர்களின் ரேஞ்ஜ் என்ன என்று அறிந்து கொள்ளாமல் இசை அமைத்தால் இது போன்ற பிரச்னைகள் வரும்!

நான்: இன்னொரு விஷயம் கவனித்தீர்கீளா? பாடல் வரிகளை சுஹாசினி ஒருமுறை படித்ததுமே, தாள கதி எப்படி இருக்க வேண்டும் என்று தபேலா வாசிப்பவருக்குச் சொல்லி   விடுகிறார். 

முரளி: ஆமாம். பாடல் வரிகளைப் படித்தவுடனேயே, வார்த்தைகள் மற்றும் வரிகளின் நீளத்தை வைத்து இதற்கு ஏற்ற தாளம் எது என்று முடிவு செய்து விடுகிறார். அது போல் கதி (வேகம்) எப்படி இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்து விடுகிறார்.

நான்: எல்லாம் ஒரு சில நொடிகளுக்குள்! சுஹாசினி சொன்னதுபோல், ஒரு கொட்டாவி விடும் நேரத்துக்குள் எல்லாம் முடிந்து விடுகிறது.

முரளி: அற்புதமான டியூன் இது. 'வளைந்து ..... போகிறேன்' என்ற சொற்கள் வளைந்து போகும் காட்சியைக் கண் முன் காட்டுகின்றன.

நான்: 'கனா' என்பதாலோ என்னவோ பாடல் வரிகளில் ஒரு மயக்க சாயல் தொனிக்கிறது. விழிகள் இரண்டும் என்பதில் கூட அற்புதமான பாவம் இருக்கிறது.

முரளி: ஆமாம். இந்த வார்த்தைகளை எம் எஸ் வி பாடும்போது காட்டும் பாவத்தையும் ஆழத்தையும் பாடகர்களால் பிரதிபலிக்க முடியவில்லை.

நான்: கடைசியில் வரும் ஹம்மிங் மிக அருமை.  

முரளி: ஆமாம். இடைவெளி இல்லாத ஃபாஸ்ட் ஹம்மிங். இந்த ஹம்மிங் பல்லவிக்கு ஒரு நிறைவைக் கொடுக்கிறது.

நான்: இவ்வளவு குறைந்த நேரத்தில் போட்டியாளர்கள் பாடலைக்
கற்றுக் கொண்டு பாடுவது கடினம். மேலும் சில பாடல்கள் எளிமையாகவும், சில கடினமாகவும் இருக்கலாம் என்பதால், இந்தச் சுற்றில் மதிப்பெண்கள் சீராக இருக்கும் என்று சொல்ல முடியாது.

முரளி: நடுவர்கள் மதிப்பெண் வழங்கும்போது இவற்றை யெல்லாம் மனதில் கொள்வார்கள் என்று நம்புவோம்.

நான்: இதே பாடலை பின்னால் வரும் இன்னொரு நிகழ்ச்சியில் எம் எஸ் வி நடுவர்களுக்குக் கற்பிக்கிறார். அப்போது போட்டியாளர்களைப் போலவே (அல்லது சற்று அதிகமாகவே கூட) நடுவர்களும் தடுமாறுவதைப் பார்க்கலாம்.

முரளி:  நடுவர்களுக்குக் கொடுத்த டியூன் இன்னும் சற்றுக் கடினமானது என்று நினைக்கிறேன்.

நான்: நான் கவனிக்கவில்லை. இதே டியூன்தான் என்று நினைத்தேன். அது சரி, பாடலுக்கு டியூன் போட்டு விட்டு அதைப் போட்டியாளர்களுக்கு எம் எஸ் வி சொல்லிக் கொடுத்த பின் அவர்கள் பாடுவதை நடுவர்கள் விமர்சிக்கிறார்கள். இது சரிதானா?

முரளி: வேறு வழியில்லையே!

நான்: சில வரிகளை நடுவர்கள் பாடிக் காட்டுகிறார்கள். அவர்கள் பாடிய விதம் சரிதானா?

முரளி: நடுவர்கள் பாடிக் காட்டும்போதும், கருத்துச் சொல்லும்போதும், எம் எஸ் வி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன என்பது அவருக்குத்தான் தெரியும்! இடையில் 'நான் போட்ட டியூன் வேறு, நீங்கள் பாடியது வேறு' என்று சொன்னது  போட்டியாளர்களைப் பார்த்தா அல்லது நடுவர்களைப் பார்த்தா என்று தெரியவில்லை!

நான்: 'கூட இருந்து டியூனை மாத்திடாதீங்க' என்று வேறு சொன்னார்!

முரளி: எப்படியோ, மெல்லிசை மன்னர் இசை அமைப்பதைக் காணக் கிடைத்தது ஒரு பெரிய விஷயம்தான்.

நான்: அவர் ஆர்க்கெஸ்ட்ரேஷன் எப்படிப் போடுவார், அத்தனை                  பேருக்கும் எப்படி instruction கொடுப்பார் என்று பார்க்க வேண்டும்

முரளி: ஆமாம். ஒரு பாட்டையாவது முழுவதாக ஆர்க்கெஸ்ட்ரேஷனோடு போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நான்: எம் எஸ் வியால் இன்றைய இசைப் பாணிக்கு ஏற்ப இசை அமைக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.இத்தனை வித்தியாசமன பாடல்களை இன்றைய சூழலிலும் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அவர் இசை அமைத்ததைப் பார்த்ததும் மலைத்து விட்டேன்.

முரளி: மெல்லிசை மன்னரின் இசை உணர்வுகளின் அடிப்படையில் அமைந்தது. அதனால்தான் அவர் இசை contemporary ஆக அமைந்து விடுகிறது. இன்றைய பாடல்களை அவர் எந்த அளவுக்குக் கேட்பாரோ தெரியாது, ஆனால் சூழ்நிலை மாற்றங்களை அவர் உணர்ந்து வருவதால் அவரால் இந்தக் காலச் சூழலுக்கும் எற்ப இசை அமைக்க முடியும்.

நான்: ஆமாம். அவர் இசை அமைத்து முடித்ததும் அனைவரும் கை தட்டினார்கள். இது வெறும் ஒப்புக்காகச் செய்யப்பட்டதாகத் தோன்றவில்லை. அவரது இசையின் இனிமையை உணர்ந்ததால் எற்பட்ட மகிழ்ச்சியில்தான் கைதட்டினார்கள் என்று நினைக்கிறேன்.

முரளி: பாடகர்கள் கூட அவர் இசை அமைத்த வரிகளை அனுபவித்து ஆனந்தமாகப் பாடியதை கவனித்தீர்களா?

நான்: இந்த நிகழ்ச்சியைப் பார்த்த இயக்குநர்கள், தயாரிப்பளர்கள் யாராவது மெல்லிசை மன்னரைத் தங்கள் படத்துக்கு இசையமைக்கப் பயன்படுத்திக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

*Written on September 2, 2011

**MSV Times
  MSV Times Forum





புதன், 7 செப்டம்பர், 2011

17. Veenai Pesum

The song 'Veenai Pesum' (from Vaazhvu en pakkam, starring Lakshmi) can be compared and contrasted with 'mouname paarvaiyaal oru paattup paada vendum, naaname jaadaiyaal oru vaarththai pesa vendum' from kodi Malar. Each song is addressed to a girl who is not enabled with the power to speak. The contrast is in the lyrics. In 'mouname paarvaiyaal', there is only a silent response from the girl, since the lyrics suggest that she use silence and gestures. But in 'Veenai pesum', the heroine hums because the lyrics suggest she speak. It is only natural that the humming from a girl not endowed with the faculty of speech is subdued. MSV could not have used a humming like the one in 'Sittukkuruvi muththam koduththu.'

'தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று.'

தென்றல் மோதினால் வலிக்குமா என்ன? அது சுகமாகத்தானே இருக்கும்? அதுவும், தென்றல் மலரின் மீது 'மோதும்போது,' 'எங்கே மலருக்கு வலிக்குமோ' என்ற உணர்வில், இன்னும் மென்மையாக அல்லவா மோதும்?

Who but Mellisai Mannar can bring out the entire import of Kavignar's lyrics into the composition?

The interlude before the second charanam is a class of its own. The progression of notes in the Veena reaching a crescendo, followed by other instruments (like violin) is a brilliant conception.

நான் அடிக்கடி நினைத்து நினைத்து அனுபவிக்கும் பாடல் இது. மனதில் ஒரு நீரோட்டமாக என்னை அறியாமலேயே அடிக்கடி வந்து என்னை வருடிச் செல்லும் பாடல்.


Originally posted in MSV Times.Com Forum on 22nd March, 2010

16. Yarukku Maappillai Yaaro – A Song Extraordinaire!

I don’t know how popular the song ‘Yaarukku maappillai yaaro?’ from the film 'Paarththaal Pasi Theerum' is (or, was, in its time.) But I find listening to this song a fascinating experience. It happens every time.

The prelude is something unique. I don’t think this kind of violin sound has been used in any other song. The orchestral note that launches the beginning of the pallavi is highly enjoyable. To me, it seems like a spring which unfolds and releases the pallavi with a gentle push. The interlude again is a unique orchestral feat.

The song is by way of a mild tease of the hero by the heroine (I am using this word for convenience, since the main heroine of this film is Savitri) peeved by the hero’s reluctance to accept her love. 

Kavignar has written the entire lyrics as a series of questions, since the heroine finds a question mark on her love, with the hero not openly reciprocating her feelings of love. All the lines end with ‘ro?’

The humming ‘ahahhahaa…’ that comes before the charanam reflects the teasing mood of the heroine. Again this is a unique humming that we cannot come across anywhere else. 

In fact the mocking expression ‘ahahahaa..’ is mostly used in conversations. This is probably the first and only time that this has been used so melodiously, producing an effect to enhance the pleasing demeanor of the song.

The picturisation, photography, the location and acting add greatly to the enjoyability of the song. Saroja Devi lives up to her title ‘Abhinaya Saraswati.’ With simple gestures, she conveys the meaning of each line so effectively yet effortlessly, naturally and pleasantly. 

The two different abhinyams she displays for the line ‘Dhoora ninRu jaadai purivaaro?’ are amazing. The choreographer needs to be applauded for making the performance so enjoyable with simple but sensible choreography.

The bright light and the shades that appear for a few moments during the song show the diligence and the intelligence of the cinematographer and the director. Black and white photography has a depth that cannot be matched by color photography, which uses artificial colors.

Last but not least is the performance of Sivaji Ganesan. Throughout this film, Sivaji performs with restraint, in keeping with the difficult position of the character he plays. His underplay of emotions and other reactions are a testimony to the versatility of the thespian. 

During this song also, he shows his reluctance by just being passive, yet displaying his dilemma. 

Another remarkable aspect of Sivaji’s meticulousness is the way he keeps his limping walk throughout the film with perfection. This may not be something that will be noticed by many but the actor, the perfectionist he is, takes extraordinary care to make his limping accurate and consistent. During this song, he is sitting and listening mostly, but he walks a few steps with that perfect limp.

After writing this much, I only feel that I have not been able to adequately express my feelings about the song and about my experience in listening to this extraordinary song from this film which is filled with gems of songs.

‘Yaarukku maappillai yaaro’ has remained and will remain one of my all time favorites.

Here is the link for the song.

Originally published in MSV Times Forum on 14th March, 2011.

July 1, 2022

Subhashri's presentation of this song in Quarrantine From Reality:


    

புதன், 5 ஜனவரி, 2011

15. காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே?- ஒரு அலசல்

படம்: பாக்யலக்ஷ்மி
எழுதியவர்: கண்ணதாசன் (வேறு யாராக இருக்க முடியும்?)
இசை: மெல்லிசை மன்னர்கள் (வேறு யாராக இருக்க முடியும்?)

பாக்யலக்ஷ்மி படத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோருமே முதலில் குறிப்பிடுவது 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' பாடலைத்தான். நானும் மாலைப்பொழுதின் மயக்கத்தில் விழுபவன் தான் என்றாலும், என்னை அதிகம் மயக்குவது 'காண வந்த காட்சிதான்.' நான் இப்படிச் சொல்வதற்காக என் ரசனையை யாரேனும் குறை கூறினாலும் பரவாயில்லை!

ஆஹா! என்ன ஒரு காட்சியைப் படைத்திருக்கிறார்கள், கவிஞரும் மெல்லிசை மன்னர்களும்! கம்ப சித்திரம் போல் அல்லவா ஜொலிக்கிறது இவர்கள் தீட்டியுள்ள இசைச்சித்திரம்!

தன் தோழியின் விட்டில் தஞ்சம் புகுந்து அவளை அண்டி வாழும் ஒரு இளம் விதவை, ஒரு நாள் இறந்து விட்டதாகக் கருதப்பட்ட தன் இளவயதுக் கணவனைக் காண்கிறாள். கட்டுக்கடங்காத மகிழ்ச்சியைத் தன் தோழியிடம் பகிர்ந்து கொள்ள நினைத்து ஓடி வருகிறாள். ஆனால் அவள் கண்ட காட்சி என்ன? இவள் கணவன், தோழியின் காதலனாக நிலவொளியில் அமர்ந்திருக்கிறான்!

இந்த அதிர்ச்சியையே தாங்க முடியாத நிலையில், தோழியின் பாடல் இவள் புண்பட்ட மனதைக் கோல் கொண்டு குத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே


பல நாள் பட்டினி கிடந்த ஒருவன் ஓரிடத்தில் அறுசுவை உணவு படைத்திருப்பதைக் கண்டு தனக்குத்தான் அது படைக்கப் பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் ஓடி வர, அவன் உயிர் நண்பன் அந்த உணவுத்தட்டை எடுத்துக்கொண்டதுடன் இல்லாமல், இவன் பட்டினியாய் இருப்பதையும் அறியாமல், மரத்தில் இருக்கும் காக்கையைப் பார்த்து, இது உனக்கு என்று நினைத்தாயா என்று கேலி பேசுவதைக் கேட்கும் நிலை எவ்வளவு சங்கடமானது!

நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
உன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரைக் காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ



தோழி பாடுவது என்னவோ நிலவைப் பார்த்துத்தான். ஆனால் பாடல் வரிகள் இவளை அல்லவா தாக்குகின்றன! தன் காதலைப் பார்த்து நிலவு அதிர்ச்சி அடைந்து நின்று விட்டதாகத் தோழி பாடுகிறாள். (நாம் ஓடும்போது நம்முடன் ஓடி வரும் நிலவு, நாம் நின்றால் தானும் நின்று விடும். அவ்வாறு நின்ற நிலவைத்தான் சீண்டும் விதமாகப் பாடுகிறாள் இவள் தோழி.)

பாடலின் ஒவ்வொரு வரியும் இவளுக்கும் பொருந்துகிறது, நிலவுக்கும் பொருந்துகிறது. வெள்ளை உடை அணிந்த இந்த இளம்விதவையும் ஒரு வெள்ளி நிலவுதானே!

காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
கன்னி நெஞ்சம் உனக்கிருந்தும் நாணமில்லையா
உன் மோக நிலை மறந்து விடு வெள்ளி நிலாவே
அந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே



முதல் சரணம் இவளைக் கேலி செய்வது போல் அமைந்திருக்கிறது என்றால் இரண்டாவது சரணம் சாட்டை அடியாக வந்து விழுகிறது.
காதல் எனக்குத்தான் உரியது, உனக்கு இல்லை. (ஏனெனில் நீ ஒரு விதவை.) உன் மோக நிலயை மறந்து விடு.

'மேகத்திலே மறைந்து விடு' என்பதற்கு, இனி உன் வாழ்வில் இருள் தான் என்று பொருள் கொள்ளலாம். விதவைகள் வெளியே வராமல் வீட்டுக்குள் மறைவாக இருக்க வேண்டும் என்ற நியதிக்கேற்ப நீயும் உள்ளே போய் ஒடுங்கிக்கொள் என்றும் பொருள் கொள்ளலாம்.

இசை பற்றிய நுண்ணறிவு எனக்கு இல்லை என்றாலும், நான் உணர்ந்து அனுபவித்த சில விஷயங்கள்:

ஒரு தோழி காதலின் களிப்பில், மற்றொருத்தி ஏமாற்றத்தின் எல்லையில். இருவர் மன நிலையும் இசையில் பிரதிபலிக்கிறது. பல்லவியில் உற்சாகம், தொடர்ந்து வரும் இணைப்பிசையில், முதலில் வரும் குழல் இசையில் ஏக்கம், பின்பு சித்தாரில் (என்று நினைக்கிறேன்) ஒரு துள்ளல், பிரகு சரணத்திலும் உற்சாகம், தொடரும் ஹம்மிங்கில் பச்சாதாபம் என்று உணர்ச்சிகளை பொம்மலாட்டக் கயிறு கொண்டு இயக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர். (மெல்லிசை மன்னர் என்றாலே பன்மைதான், மன்னர்கள் என்று சொல்ல வேன்டியதில்லை, ஆயினும் இவர்கள் பாடல்களைக் கேட்டால் 'கள்' குடித்தது போல் போதை ஏற்படுவதால், மன்னர்'கள்' என்று சொல்கிறோம் என்று வாலி ஒருமுறை கூறினார்!)

'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' என்பதுபோல், ஒருவர் சிரிக்க, மற்றவர் தவிக்க, இருவர் உணர்ச்சிகளையும் ஒரே பாடலில் காட்டியிருப்பது மெல்லிசை மன்னருக்கு மட்டுமே கை வந்த கலை.

'மாலைப்பொழுதின் மயக்கத்தில்' ஒரு பெண்ணின் துயரம் நேரடியாக வெளிப்பட்டு நம்மை உருக வைக்கிறது. 'காண வந்த காட்சியில்', உற்சாகத்துகுப் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் துயரம் நம் மனதைப் பிசைகிறது.

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும், இதன் இசை இன்பத்தை அளித்தாலும், பாடலின் உள்ளிருக்கும் சோகம் எனக்குள் புகுந்து கொண்டு என்னைச் சற்று நேரம் கலங்க வைக்கிறது.

உடனே பாடலைக் கேட்க வேன்டும் என்று தோன்றுகிறதா? இதோ உங்களுகாகக் காத்கிருக்கிறது மெல்லிசை மன்னரின் விருந்து! 

  http://www.raaga.com/player4/?id=26728&mode=100&rand=0.6369598480590672

காண வந்த காட்சி என்ன

14. விஸ்வராமாயணம்

ஆழ்வார்களின் பாசுரங்களிலிருந்து ஆங்காங்கே  வரிகளையும், வார்த்தைகளையும் எடுத்து அவற்றைத் தொகுத்துப் பாசுர ராமாயணம் என்ற பெயரில் செய்யுள் வடிவில் அமைந்த ஒரு சுருக்கமான ராமாயணத்தை உருவாக்கியிருக்கிறார் பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆச்சாரியர்.

அது போல் எம் எஸ் வி இசை அமைத்த திரைப்படப் பாடல் வரிகளிலும் ராமாயணம் முழுவதும் வருகிறது என்பது ஒரு வியப்பான விஷயம்!

ராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உண்டு. இந்த ஏழு காண்டங்களையும் குறிக்கும் பாடல்கள் எம் எஸ் வியின் பாடல்களில் உண்டு! 

ஏழாவது காண்டமான உத்தர காண்டம் சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது, ராமர், சீதை அனைவரும் அவதாரம் முடித்து இவ்வுலகை விட்டு நீங்கியது போன்ற விஷயங்களை விவரிப்பதால், ராமாயணம் சொல்பவர்களும், படிப்பவர்களும் ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தோடு முடித்துக் கொள்வார்கள். உத்தர காண்டத்தைத் தவிர்த்து விடுவார்கள். ஒருவேளை உத்தர காண்டத்தைப் படித்து விட்டால், மீண்டும் பால காண்டத்தில் ராமாவதாரத்தைப் படிக்க வேண்டும் என்பது ஒரு மரபு.

எம் எஸ் வியின் இசை வீச்சுக்கு உத்தர காண்டமும் தப்பவில்லை. எனவே, உத்தர காண்டத்தில் துவங்கி யுத்த காண்டத்தில் முடிக்கிறேன். 

காட்டில், வால்மீகி ஆசிரமத்தில், லவ குசர்கள் பிறந்து, வால்மீகியிடம் ராமாயணம் கற்று, ராமன்தான் தங்கள் தந்தை என்று அறியாமலே ராமாயணத்தைப் பாடிப் பரப்புகிறார்கள் ('லவ குசா' திரைப்படத்தில், லவ குசர்கள் பாடுவதாக, 'ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே' என்ற அற்புதமான ஒரு பாடல் வருகிறது.  மருதகாசி எழுதிய இந்தப் பாடலுக்கு இசை கே வி மகாதேவன், கண்டசாலா.)

 எனவே, உத்தர காண்டத்தில் ராமாயணம் துவங்கப் படுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

உத்தர காண்டம்: (உத்தரம் என்றால் முடிவு, மறைவு என்று பொருள்.)
(யாரோ சொன்ன அவச்சொல்லைக் கேட்டு, ராமன் சீதையைக் காட்டில் கொண்டு விட்டதையும், சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி லவ குசர்களை ஈன்றதையும், லவ குசர்கள் வால்மிகியிடம் ராமாயணம் பயின்று, ராமகாதையைப் பாடிப் பரப்பியதையும், அஸ்வமேத யாகம் செய்த ராமன், லவ குசர்களுடன் போரிட நேர்ந்து, பின்பு அவர்கள் தன் புதல்வர்கள்தான் என்று அறிந்ததையும், அவர்களுக்கு முடி சூட்டி விட்டுக் கானகம் சென்று, சரயு நதியில் மூழ்கி இவ்வுலகை விட்டு அகன்றதையும், அவ்வாறே ராமனின் மூன்று தம்பிகளும் மறைந்ததையும், பூமி பிளந்து தன் மகளான சீதையைத் தனக்குள் அழைத்துக் கொண்டதையும் உத்தர காண்டம் விவரிக்கிறது.)

ண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோ?

('அம்மம்மா தம்பி என்று நம்பி' - ராஜபார்ட் ரங்கதுரை)

கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி

தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
தன் பாவம் இல்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை

ஊமை கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்

('கானகத்தைத் தேடி' - கொடி மலர்)

ராமநாமம் தந்த ராகம்
லவனாகக் குசனாக உருவான கீதம்
(மல்லிகை முல்லை - அண்ணன் ஒரு கோயில்)

பால காண்டம்:
(ராம, லட்சுமண, பரத சத்துருக்குனர் பிறப்பு, ராம லட்சுமணர் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்று முனிவர்களின் யாகத்தைக் காத்தது, மிதிலை சென்று வில்லை முறித்து ராமன் சீதையை மணமுடித்து அயோத்தி திரும்புதல்)

வம்சத்துக்கொருவன் ரகுராமன்

ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி 

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)


மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனியில் ஜானகி தங்கம்
மணிமாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்
ஸ்ரீராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே

('மதுரா நகரில்' - பார் மகளே பார்)

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் 
ராஜாராமன் நினைத்திருந்தான்
அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் -
மிதிலைக்கு வந்திருந்தார் .

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்
இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை ஒருபுறம்
அவள் நிலைமை திரிபுறம்


கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே
அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை
அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை


முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்.
ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்
ஜானகி கலங்கி விட்டாள்.

('ஜனகனின் மகளை' - ரோஜாவின் ராஜா)

சீதைக்கேற்ற ராமனோ?
('ராதைக்கேற்ற கண்ணனோ?' - சுமைதாங்கி)

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி வைதேகி காத்திருந்தா
ளோ?

மையிட்ட கண்ணொடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ - அங்கே
தேவர்கள் யாவரும் திருமண மேடை அமைப்பதைப் பார்த்திருந்தாரோ திருமால் பிரம்மா சிவன் எனும் மூவர் காவலில் நின்றிருந்தாளோ - தேவி
வைதேகி காத்திருந்தாளோ?


பொன் வண்ணமாலை ஸ்ரீராமன் கையில் மூவரும் கொண்டு தந்தாரோ அங்கே
பொங்கும் மகிழ்வோடு மங்கல நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ தேவி
சீருடன் வந்து சீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ தேவி

('வசந்தத்தில் ஓர் நாள்' - மூன்று தெய்வங்கள்)

கல்யாணக்கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)


ஸ்ரீராமன் ஜானகியின் திருமுகத்தைப் பார்த்திருந்தான்
இன்றுவரை  அழியாமல் இதயங்கள் மீதே வாழ்கின்றான் 
 ('ஒருவனுக்கு ஒருத்தி என்று' - தேனும் பாலும்)

அயோத்யா காண்டம்:
(தசரதன் ராமனுக்கு முடி சூட்டத் தீர்மானித்தது, கைகேயியின் பிடிவாதத்தால் ராமன் லட்சுமணன் சீதையுடன் காட்டுக்குச்சென்றது )

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்

('ராமன் எத்தனை ராமனடி? - லக்ஷ்மி கல்யாணம்)

மந்தரையின் போதனையால் மனம் மாறிக் கைகேயி
மஞ்சள் குங்குமம் இழந்தாள்

('ஒற்றுமையால் வாழ்வதாலே' - பாகப்பிரிவினை)

ராம நாடகத்தில் மூன்று தம்பியரின் உள்ளம் கண்டேனே
('அம்மம்மா தம்பி என்று நம்பி' - ராஜபார்ட் ரங்கதுரை)

மாலை சூடி வாழ்ந்த வேளை
வனவாசம் போனாலும் பிரியாத சீதை

('மல்லிகை முல்லை' - அண்ணன் ஒரு கோவில்) 


மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான் 
மன்னவன் ராமன் வனம் சென்றான் 
பரதன் கண்ணீர் கமிகையில் நீந்தி
பாதுகையுடனே முடி கொண்டான்.

('இறைவா உனக்கொரு கேள்வி' - அன்னையும் பிதாவும்) 

ஆரண்ய காண்டம்:
(ராமன் சீதை லட்சுமணன் இவர்களின் காட்டு வாழ்க்கை, ராவணன் சீதையை அபகரித்துச் சென்றது)

ஜானகிராமன் காட்டினில் திரிஞ்சான்
பாதியில்தானே சீதையைப்  பிரிஞ்சான்  
('போடச்சொன்னால் போட்டுக்கறேன்' - பூவா தலையா)

கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே
சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே!

('அடி என்னடி உலகம்' - அவள் ஒரு தொடர்கதை) 

ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராகவன் தலைவி 
(நான் என்றால் அது அவளும் நானும் - சூரியகாந்தி)

கிஷ்கிந்தா காண்டம்:
(ராமன் சுக்ரீவன், அனுமனைச் சந்தித்தது, வாலியை வதம் செய்தது)

அவர்களைச் சேர்க்க  அனுமான் பறந்தான்
('போடச்சொன்னால் போட்டுக்கறேன்' - பூவா தலையா)

சுந்தர காண்டம்:
(அனுமன் இலங்கை சென்று சீதையை
க் கண்டு வந்து ராமனிடம் சொல்லுதல்) 

ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி 
மீண்டும் நான் சேர்க்கிறேன் நான் ஒரு மாருதி 
('சொந்தங்களை வாழ்த்தி' - நிலவே மலரே)

யாரோ இவளோ ராமன் தேடிய சீதை 

('திருவளர்ச் செல்வியோ?' - ராமன் தேடிய சீதை) 

கணையாழி இங்கே, மணவாளன் அங்கே 
(கண்கள் இரண்டும்' - மன்னாதி மன்னன்)

யுத்த காண்டம்:

(போரில் ராவணனை வென்று, சீதையுடன் அயோத்தி திரும்பி மணிமகுடம் தரித்தல்)

வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கு
ம் ஸ்ரீஜயராமன் 

அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்காரரூபன் அந்த சுந்தரராமன்


ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது ப்யம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்


ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

குறிப்பு:  மேலே குறிப்பிட்ட பாடல்களில்,

'ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராகவன் தலைவி' 
(நான் என்றால் அது அவளும் நானும் - சூரியகாந்தி), 

 'ஜானகிராமன் காட்டினில் திரிஞ்சான்
பாதியில்தானே சீதையைப்  பிரிஞ்சான் 
அவர்களைச் சேர்க்க  அனுமன் பறந்தான்'
('போடச் சொன்னால் போட்டுக்கறேன்'  - பூவா தலையா),

ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி 
மீண்டும் நான் சேர்க்கிறேன் நான் ஒரு மாருதி 

('சொந்தங்களை வாழ்த்தி' - நிலவே மலரே)

ஆகிய பாடல் வரிகளை எழுதியவர் வாலி. 

'ஜனகனின் மகளை' (ரோஜாவின் ராஜா) பாடலை எழுதியவர் புரட்சிதாசன்.

மற்ற பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.

13. வரிகளுக்கு உயிர் ஊட்டும் வல்லமை படைத்தவர் எம் எஸ் வி

பாடல்களில் வரும் சொற்களுக்கு உயிரூட்டி, அவற்றை நடமாட விடுவது மெல்லிசை மன்னருக்குக் கை வந்த கலை. எம் எஸ் வியின் ஒவ்வொரு படலிலும் இதை நம்மால் உணர முடியும்.

சாதாரண சொற்களையே சிற்பமாக வடிப்பவர், இசை, நடனம் தொடர்பான வார்த்தைகள் வந்தால் அவற்றை விட்டு வைப்பாரா? நடனம் குறித்த வார்த்தைகளை அவர் எப்படி உயிர்ப்பித்திருக்கிறார் என்று நான் கவனித்து அனுபவித்த மூன்று இடங்களைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது போல் பல உதாரணங்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

1.உனக்கு மட்டும் உனக்கு மட்டும் (மணப்பந்தல்): 

இதில் இரண்டாவது சரணத்தில்,

'அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன்'
என்று ஒரு வரி வருகிறது. இந்த வரியைத் தொடர்ந்து ஒரு மென்மையான நாட்டிய இசையைப் புகுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். 

மார்பில் நடனமாடுவது என்றால் நமக்கு ஒரு குழந்தை நம் மார்பின் மீது ஆடுவதுதான் நினைவுக்கு வரும். மார்பு மேடையாக இருக்கும்போது நடனம் மிக மென்மையானதாகத்தானே இருக்க வேண்டும்? அந்த மென்மையான இசையை இங்கே நாம் அனுபவிக்கலாம். 

இந்த இசையைக் கேட்கும்போதெல்லம் ஒரு சிறு குழந்தை தன் பிஞ்சுக் கால்களை உதைத்து  ஆடும் காட்சிதான் என் கண் முன் வரும்.

இந்தப் பாடலின் முதல் சரணத்தில் இதற்கு இணையான வரி ('கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே')யைத் தொடர்ந்து ஒரு ஹம்மிங் தான் வரும். எனவே நடனம் என்ற வார்த்தைக்காகத்தான் இத்தகைய பின்னணி இசையை மெல்லிசை மன்னர் பயன் படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு. உங்கள் உடனடி அனுபவத்துக்காகப் பாடலின் வலை இணைப்பை இங்கே கொடுத்திருக்கிறேன்.



2) என்ன பொருத்தம் (ரகசிய போலீஸ் 115): 

இதன் முதல் சரணத்தில்,
'நாட்டியம் ஆடட்டும் நாடகப் பாவை'
என்ற வரி வருகிறது.

இங்கே நாயகி நாயகன் மீது கோபமாக இருக்கிறாள் (நாயகியின் கோபமும், நாயகனின் கிண்டலான ரசிப்பும் பாடல் முழுவதுமே பின்னணி இசையிலும், பாடல் வரிகளின் உச்சரிப்பிலும் மிக அழகாகப் பின்னப்பட்டிருப்பது எம் எஸ் விக்கு மட்டுமே கை கூடக் கூடிய ஒரு அற்புதச் செயல்.) 

அவள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நடன இசை அமைந்திருக்கிறது. நாட்டிய இலக்கணத்துக்கு இசைவான இசைதான். ஆனாலும் எதையோ போட்டு உடைப்பது போன்ற ஒரு ஆத்திரம் இதில் வெளிப்படுவதைக் கேட்பவர்கள் எளிதாக உணரலாம். 

'உனக்கு மட்டும்' பாடலில், மார்பின் மீது ஆடப்படும் நடனத்துக்கான மென்மையான இசைக்கு எதிர் விதமாக, மேடையே உடைந்து விடுமோ என்று அஞ்சத் தோன்றும் இசை இது.


3) ஆகாயம் காணாத சூர்யோதயம் (ஆலய தீபம்): 

இந்த அற்புதமான பாடலைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். ஸ்ரீதருடன் இணைந்து எம்.எஸ்.வி பணியாற்றிய கடைசிப் படம் இது என்று நினைக்கிறேன்.

இதில் முதல் சரணத்தில்,

'தாலாட்டு உனக்காக நான் பாடினேன்
தாயன்பில் எனக்காக நீ பாடம்மா'

என்ற வரிகளைத் தொடர்ந்து, ஒரு சிறிய ஹம்மிங்கில் ஒரு தாலாட்டை அமைத்திருப்பார் எம் எஸ் வி. அது ஒரு அற்புதம்.

இரண்டாவது சரணத்தில்,

'இளங்கோவும் காணாத என் கண்ணகி
எழில் கொஞ்சும் ஆட்டத்தில் பொன் மாதவி'

என்று வரும்.

இந்த வரிகளைத் தொடர்ந்து, வெறும் சலங்கை ஓசையையும், தாளக் கருவிகளையும் வைத்து, சில வினாடிகளில் ஒரு மினி நாட்டியக் கச்சேரியையே நிகழ்த்தியிருக்கிறார் நம்மவர். மாதவி நடனத்துக்குப் பெயர் போனவள். கவிஞர் வேறு 'எழில் பொங்கும் ஆட்டம்' என்று எழுதி விட்டார். இந்த சந்தர்ப்பத்தை விட்டு விடுவாரா எம் எஸ் வி? அற்புதம்.

மூன்று பாடல்களுக்குமே வலை இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். காரணம். என்னால் என் அனுபவத்தை முழுமையாகச் சொற்களில் விளக்க முடியவில்லை. இதைப் படிப்பவர்கள் உடனே இந்தப் பாடல்களையும் கேட்டால், என்னால் விளக்க இயலாத நுணுக்கங்களையும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள் என்பதால்தான். நன்றி.