சனி, 12 ஆகஸ்ட், 2017

36. உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது

'பழனி' படத்தில் இடம் பெறும் 'உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா' என்ற இந்த டூயட் ஒரு எளிய கிராமிய அல்லது நாட்டுப்புறப் பாடல். Folk song என்ற பெயரில் மேற்கத்திய வாடை வீசுவதால், இந்தப் பெயரை நான் விரும்புவதில்லை. Folk song என்ற பெயரை மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளட்டும்!

மெல்லிசை மன்னரின் பாடல்களை நாட்டுப்புறப்  பாடல்கள் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

நாட்டுப்புறப் பாடல் என்றால் பாடல் வரிகள், ராகம், இசைக்கருவிகள் எல்லாமே நாட்டுப்புறத்துக்கு உரிய எளிமையுடனும் இனிமையுடனும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இந்தப்பாடல்.

எனக்கு இசைக்கருவிகளைப் பற்றிய அறிவு கிடையாது. இந்த சுகமான பாடலில், பல்லவி முடிந்து அனுபல்லவி துவங்குமுன் வரும் இசை, தண்ணீர் பொங்கி வருவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இடையிசை வயல்களிலும், வாய்க்கால்களிலும்  தண்ணீர் ஓடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இவையெல்லாம் என் மாணவப் பருவத்தில் இந்தப் படலைக் கேட்டபோதே ஏற்பட்ட உணர்வுகள்!

மிக மிக இனிமையான ட்யூன். வேகமாக நகர்ந்து செல்லும் பாடல். 'சொல்லால் சொன்னால்' என்ற ஒரே மாதிரி தொனிக்கும்  இரு வார்த்தைகளில் 'சொன்னால்' என்ற வார்த்தையில் கூடுதல் இனிமையையும், கொஞ்சலையும் சேர்த்திருக்கும் மெல்லிசை மன்னரின் முத்திரைப் பதிப்பு. ஆஹா! தெளிவான நீரோட்டம் போல் என்னவொரு அருமையான பாடல்!

பல்லவிக்குப் பின்னால் 'ஆஹஹாஹா அஹஹா......' என்ற short hammingஇன்  மூலம் வெவ்வேறு தளங்களில் அமைந்துள்ள சரணத்தையும் பல்லவியையும் இணைக்கும் லாகவம்!

இது ஒரு கனவுப்  பாடல். 'கனவு முடிந்து விட்டது எழுந்திரு' என்று கதாநாயகியை மெல்லத் தட்டி எழுப்புவது போல் ஒரு அருமையான முத்தாய்ப்பு இசையுடன்  முடிகிறது பாடல்! Typical MSV way of signing off!

கிராமஃபோன் இசைத்தட்டில் மூன்று சரணங்கள் உண்டு. 'வாழைத்தோட்டம் போட்டது போல்' என்ற இரண்டாவது சரணம் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. கீழே முதலில் கொடுக்கப்பட்டுள்ள ஆடியோ பதிவில்   மூன்று சரணங்களையம் கேட்கலாம். இரண்டாவது சரணத்தில் மாறுபட்ட இடையிசை அமைக்கப்பட்டிருப்பதையும்  ரசிக்கலாம்.

1. கிராமஃபோன் இசைத்தட்டு வடிவம்
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது  - பழனி - 1965

2. திரைப்பட (வீடியோ) வடிவம்





வியாழன், 10 ஆகஸ்ட், 2017

35. எம் எஸ் வியின் தூக்கத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!


பெரிய இடத்துப்பெண் படத்துக்கு ஒரு பாடல் அமைக்க வேண்டும். இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் கண்ணதாசனுக்காக வெகு நேரம் காத்திருந்து விட்டு, அவர் வராததால் வீட்டுக்குப் போய் விட்டார்கள். அவர்கள் போய்ச் சற்று நேரம் கழித்துக் கண்ணதாசன் வந்தார். அன்றே பாடலை எழுதி முடித்து விடலாம் என்று நினைத்து, MSVஐ வரச்சொல்வதற்காக அவர் வீட்டுக்கு ஃபோன்
செய்தார். MSV தூங்கி விட்டார் என்று தகவல் வந்தது.

கண்ணதாசன் தன் உதவியாளரை வைத்துக்கொண்டு பாடலை எழுதி முடித்தார். பாடலை ஸ்டூடியோவில் ஒருவரிடம் கொடுத்து, 'பாட்டு எழுதி விட்டேன். விஸ்வநாதன் வந்ததும் டியூன் போடச் சொல்லுங்கள்' என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

அவர் எழுதிய பாடல்;

"அவனுக்கென்ன தூங்கி விட்டான். அகப்பட்டவன் நான் அல்லவா!'

(குறிப்பு MSVஐ விட மூன்று வயது மூத்தவராகிய கண்ணதாசன் அவரை 'வாடா போடா' என்றுதான் பேசுவார்.)

இந்த நிகழ்ச்சியை மெல்லிசை மன்னரே பல முறை வானொலி/தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சொல்லாயிருக்கிறார்.

இந்தப் பாடலில் 
இதயத்தையும் கொடுத்து விட்டு 
இறக்கும் வரை  வரை துடிக்க விட்டான் 

என்ற வரிகள் அற்புதமாக அமைந்திருக்கின்றன.



பாடல் இதோ!