வெள்ளி, 16 அக்டோபர், 2020

46. Why MSV Remains the Greatest Ever Composer

Why does MSV remain the greatest Music Director of India. 

Here is an answer from Mr. Shrikant Narayan, a Chartered Accountant, Singer, Movie Lover, Music Lover and Reader:

https://www.quora.com/Who-is-best-Ilayaraja-MSV-or-Rahman-And-why/answer/Shrikant-Narayan?ch=10&share=0ea31df6&srid=u5yBu

I reproduce the comments I have added to the post. (My comments can also be seen in the post)

Kudos for the detailed analysis. MSV has given variety like no other composer has given. His composing was always transparent and spontaneous. He didn’t feel the need to compose music behind closed doors. However I disagree with Mr. Srikant’s observation “Neither producers nor directors demanded this. MSV wanted to prove how greater he is, so had put additional efforts.” MSV’s creating different interludes was not because of his desire to prove his greatness but because of the urge of his creativity. He could not bur do so! When so much variety was flowing out of his imagination why should he be stingy in delivery? Even when the same interlude was used, he would make minor changes (like interchanging Accordion and Violin as in Pesuvadhu KiLiya or interchanging Flute and Violin as in Kodiyasaindhadhum) or adding a humming or n number of other embellishments which the listeners won’t even notice! It would require thousands of research articles to decipher the nuances of his music, analyze them and discover the wonders packed into them. Some people have been doing it already. I have no doubt that many research articles written about MSV’s music would adorn the libraries on international music libraries in the centuries to come. Thank you Mr. Srikant for such a meticulous and monumental write up.

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

45. ஆதவனின் கதிரில் ஒளிர்ந்த பனித்துளி - எஸ் பி பிக்கு ஒரு அஞ்சலி

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு என் அஞ்சலி.

எஸ் பி பியைத் தமிழ்த் திரையுலகுக்கு சாந்தி நிலையம் படத்தில் வரும் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல் மூலம் அறிமுகப்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம் எஸ் வி என்பது அனைவரும் அறிந்தது.

இதற்கு இரண்டு வருடங்கள் முன்பே எஸ் பி பி மெல்லிசை மன்னரைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டு ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைப் பாடிக் காட்டியதையும், மெல்லிசை மன்னர், ‘உன் பாடும் திறனும், குரல் வளமும் சிறப்பாக உள்ளன. ஆனால் உன் தமிழ் உச்சரிப்பு மேம்பட வேண்டும். அதனால் நன்றாகத் தமிழ் கற்றுக் கொண்டு அப்புறம் என்னை வந்து பார்’ என்று கூற, அதன்படி தமிழ் கற்றுக்கொண்டு அவர் மெல்லிசை மன்னரை மீண்டும் சந்தித்தபோது மெல்லிசை மன்னர் அவரை நினைவில் வைத்துக்கொண்டு அவருக்கு வாய்ப்புக் கொடுத்தையும் எஸ் பி பி அவர்கள் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறார்..

1969ஆம் ஆண்டு வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தில் இடம் பெற்ற ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல் முதல் 2004 இல் வெளியான ‘விஸ்வதுளசி’ படத்தில் இடம் பெற்ற ‘கண்ணம்மா கனவில்லையா’ பாடல் வரை எஸ் பி பிக்குப் பல்வகையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி.

எஸ் பி பியின் குரல் வளம், வன்மை,இசை நுணுக்கங்களை வெளிக்கொணரும் வல்லமை, நெகிழ்வு, பல்வேறு மாறுபாடுகளை வெளிப்படுத்தும் குரல் திறன் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை முழுமையாக வெளிப்படுத்தும் பல பாடல்களை அவருக்குக் கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. இவற்றைப் பட்டியலிட்டு விவரிக்கப் பல தொடர் பதிவுகளும் இசை நுண்ணறிவும் வேண்டும். 

எஸ் பி பி பல மொழிகளில் பாடி இருக்கிறார், பல இசை அமைப்பாளர்களிடம் பாடி இருக்கிறார். ஆனால் இவை அனைத்துக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் மெல்லிசை மன்னர் என்பதை மறுக்க முடியாது. ஹிந்தியில் ‘ஏக் து ஜே கேலியே’ படத்தில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்ததற்கு அதன் மூலத் திரைப்படமான ‘மரோ சரித்ரா’ (தெலுங்கு) திரைப்படத்தில் ‘எம் எஸ் வியின் இசையில் அவர் பாடிய பாடல்கள் பெரும் வெற்றி கண்டதும் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

1969ஆம் ஆண்டு வெளியான ‘பால்குடம்’ படத்தில் எஸ் பி பிக்கு ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற ஒரு அருமையான பாடலைக் கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி. எஸ் பி பி யின் முதல் 10 பாடல்களில் இதுவும் ஒன்று என்று Youube இல் ஒரு அன்பர் குறிப்பிட்டிருக்கிறார். எப்படியும், எஸ் பி பி யின் ஆரம்பக் காலப் பாடல்களில் இது ஒன்று என்பதில் ஐயமில்லை.

எஸ் பி பியின் திறமையை அப்போதே நன்கு உணர்ந்து அதை மெல்லிசை மன்னர் திறம்படப் பயன்படுத்தியிருப்பதை இந்தப் பாடலைக் கேட்டால் உணரலாம். எம் எஸ் வியின் நுணுக்கமான இசை மாறுபாடுகள் நிறைந்த இந்தப் பாட்டை அன்றைய புதுமுகப் பாடகரான எஸ் பி பி ஒரு அனுபவம் வாய்ந்த பாடகரைப் போல் அனாயாசமாகப் பாடி இருக்கிறார்.

அதிகம் கவனிக்கப்படாத இந்தப் பாடல் ஒரு சுவையான இசை விருந்து. பாடலில் மூன்று சரணங்கள். மூன்றும் வெவ்வேறு ராகங்களில்! மூன்றில் பல்லவியையும் முதல் சரணத்தையும் மட்டும்தான் எஸ் பி பி பாடுகிறார். இரண்டாவது மூன்றாவது சரணங்களை சுசீலா பாடுகிறார். ஆயினும் பாடலில் எஸ் பி பி நிறைந்திருக்கிறார்.

பல்லவி மற்றும் ஒரு சரணத்திலேயே பல modulations, இசை நெகிழ்வுகள் ஆகியவற்றை அளித்து எஸ் பி பியின் திறமைக்குத் தீனி போட்டிருக்கிறார் எம் எஸ் வி.. பல்லவியை மட்டும் எடுத்துக் கொண்டாலே

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினைவாக

என்று சற்றே அதிர்வான தொனியில் துவங்கி,

செண்பகப்பூ வாங்கி வந்தேன்
பெண்முகத்தின் நினைவாக

என்று குரலை உயர்த்தி, ‘உனக்காக’ என்று இன்னும் குரலை உயர்த்தி, பிறகு ‘அன்பே’ என்று குழைந்து, ‘நான் உனக்காக’ என்று மீண்டும் அதிர்வான தொனியில் பாடி….

நான்கு வரிகளுக்குள் இத்தனை வேறுபாடுகளைக் கொண்டு வருவது எம் எஸ் விக்குப் புதிய விஷயமோ, பெரிய விஷயமோ அல்ல. ஆனால் ஒரு புதிய பாடகரிடம் இந்த இசை வேறுபாடுகளை அருமையாக வெளிக் கொணர்ந்ததும், அந்தப் பாடகர் அவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியதும் சிறப்பு.

மூன்று சரணங்கள் மூன்று ராகம் என்னும்போது மூன்று இடையிசைகளும் வேறுபட்டவையாகத்தானே இருக்க வேண்டும்? மூன்றும் எளிமையாக அமைக்கப்பட்ட அருமையான இசைக் கோலங்கள். குறிப்பாக முதல் இடையிசை பல்லவியைக் கையைப் பிடித்து அழைத்து வந்து சரணத்துடன் இணைப்பது போல் அவ்வளவு இயல்பாக இருக்கிறது.

முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி பாடியதும், பாடலில் எஸ் பி பியின் பங்கு நிறைவு பெறுகிறது. தற்போதைக்கு அவருக்கு விடை கொடுத்து விட்டு, பாடலின் பிற அம்சங்களைப் பார்ப்போம். (இறுதியில் மீண்டும் எஸ் பி பிக்கு வருவோம். இந்தப் பதிவே அவரைப் பற்றியதுதானே!)

முதல் சரணம் முடிந்து பல்லவி ஒலிக்கும்போதே, பல்லவியுடன் இணைந்து வில்லனின் சிரிப்பு ஒலிக்கும்போது பாடலின் தளம் மாறுகிறது.

(இந்தப் பாடலைக் கேட்கும்போதே அதன் இசைக் கட்டுமானத்திலிருந்து இது ஒரு நாடகக் காட்சி என்று நாம் அறிந்து கொள்ளலாம். பாடலின் காட்சி youtube காணொலியில் இல்லை. இது சிவகுமார் கீதாஞ்சலி நடிக்கும் ஒரு கல்லூரி நாடக்க் காட்சி என்று youtube இல் ஒரு அன்பர் குறிப்பிட்டிருக்கிறார்.)

வில்லனின் சிரிப்பைத் தொடர்ந்து அதனுடன் இயைந்து இரண்டாவது இடையிசை வருகிறது. காதலில் வில்லன் வந்து விட்டதால் அந்த அபாயத்துக்கு ஏற்ற இடையிசை. அதைத் தொடர்ந்து அனுதாபத்தைத் தூண்டும் இசை. பிறகு இரண்டாவது சரணத்தை ‘அன்பு நிறைக் காதலியே’ என்று தொடங்கி சுசீலா பாடுகிறார். காதலன் எழுதி காதலி படிக்கும் காதல் கடிதம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

கடிதங்களுக்கென்று ஒரு இசை வடிவத்தை மெல்லிசை மன்னர் ‘அன்புள்ள மான் விழியே’ பாடலில் ஏற்கெனவே உருவாக்கி இருக்கிறாரே! (பின்னால் வந்த ‘நான் அனுப்புவது கடிதம் அல்ல,’ ‘கண்மணி அன்போடு காதலன்,’ ‘நலம் நலமறிய ஆவல்’ போன்ற கடிதப் பாடல்கள் இந்த வடிவத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டவைதான் என்று இசையமைப்பாளர் தாயன்பன் அவர்கள் கூறியதை நினைவு கூர்கிறேன்) எனவே கடிதத்துக்கேற்ற இசை வடிவத்தில் இந்தச் சரணத்தை அமைத்திருக்கிறார்.

இரண்டாவது சரணம் முடிந்த பின் பல்லவி வரவில்லை. ஏனெனில் இப்போது காதலி அவன் கடித்தைப் படித்து விட்டு மூன்றாம் சரணத்தில் அதற்கு பதில் சொல்லப் போகிறாள். எனவே இங்கு (காதலன் பாடிய) பல்லவி பொருத்தமாக இருக்காது. எப்போதுமே சூழல் பற்றிச் சிந்தித்து இசை அமைப்பவர் அல்லவா மெல்லிசை மன்னர்!

எனவே இரண்டாம் சரணம் முடிந்ததும் இடையிசை, பிறகு மூன்றாம் சரணம். நான் முன்பே குறிப்பிட்டது போல் இந்த இடையிசை இன்னொரு வேறுபட்ட இசை. பழைய புத்தகங்களில், சில சமயம் ஒரு புதிய அத்தியாயம் பழைய அத்தியாயத்தின் சம்பவத்தின் தொடர்ச்சியாக இருந்தால், அத்தியாயத்தின் தலைப்பில் ‘இதுவுமது’ என்று குறிப்பிடுவார்கள். அது போல் இந்த இடையிசை வரப்போகும் சரணம் முந்தைய சரணத்தின் தொடர்ச்சி என்பதைக் குறிப்பிடுவது போல் இருக்கும்!

இந்த மூன்றாவது சரணத்தில் காதலி காதலின் கடிதத்துக்கான தன் பதிலைக் கூறுகிறாள். இதில் வரும்

பனித்துளியின் வாழ்வெல்லாம் சிலகாலம் என்றாலும்

கதிர் வந்து முத்தமிடக் காத்திருக்கும் எந்நாளும்

என்ற வரிகளில் தான் ஒரு காவியக் கவிஞர் என்பதை வாலி நிரூபிக்கிறார். எவ்வளவு அற்புதமான வரிகள்! சங்க இலக்கியம் போல் அல்லவா ஒலிக்கின்றன இவ்வரிகள்!

இறுதியாகக் காதலியின் கையொப்பம்!

இப்படிக்கு

உன் அடிமை

உனை ஆளும் பெண்ணடிமை.

ஆளும் பெண்ணடிமை! எஜமானரை ஆளும் அடிமை. இது காதலில்தான் சாத்தியம். ஆங்கிலத்தில் oxymoron  என்று அழைக்கப்படும் இந்த முரணான சொற்றொடர் வாலியின் ஆளுமைக்கு இன்னும் ஒரு சான்று.

‘MSV என்ற மூன்றெழுத்து இல்லாவிட்டால் வாலி, வாணி, பாலு ஆகிய மூன்று இரண்டெழுத்துக்களும் இல்லை’ என்று வாலி ஒரு முறை குறிப்பிட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தப் பாடல்.

இங்கே பனித்துளி என்று வாலி எழுதி இருப்பதை எஸ் பி பிக்குப் பொருத்திப் பார்ப்போம். எஸ் பி பி என்னும் பனித்துளி மெல்லிசை மன்னர் என்னும் ஆதவனின் ஒளி பட்டு மிளிர்ந்த்து. பொதுவாக சூரிய ஒளி பட்டதும் பனித்துளி மறைந்து சூரியனின் கதிரில் கலந்து விடும். ஆனால் இந்தப் பனித்துளி ஆதவனின் கதிரால் ஒளியூட்டப்பட்டுப் பல ஆண்டுகள் ஒளி விட்டுப் பிரகாசித்து, பல இசை அமைப்பாளரகளுக்கும் ஒரு பொக்கிஷமாக விளங்கி அவர்கள் பாடலுக்கு உயிரூட்டிக் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தது. 

எஸ் பி பி அவர்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்.




 

புதன், 24 ஜூன், 2020

44. மெல்லிசை மன்னர் - ஒரு கவிதாஞ்சலி


திரை இசைக்கு நல்ல காலம் எம் எஸ் வி இசையமைத்த காலம்
இதை உலகுக்கு உணர்த்தவே உதித்தது  இந்த வலைத்தளம்
வலைத்தள உலகில் பதித்ததோர் தடம்
மெல்லிசை மன்னரின் இசைக்கோலங்கள் என்னும் இத்தளம்

யார் இந்த எம் எஸ் வி?

இசையால் அன்று நம்மை மயக்கிய மன்னர்
இரவு உணவு இல்லாதோருக்கும் இவர் இசைதான் டின்னர்
திரை இசை உலகில் இவர் என்றுமே வின்னர்
இசை அமைக்க வந்த எவருமே இவர் பின்னே ஓடி வரும் ரன்னர்!

தென்னிசை வட இசை மேற்கிசை கிழக்கிசை எல்லாமே
இன்னிசையாய் மாறும் இவர் கைக்குள் வந்தால்
ஆர்மோனியப் பெட்டி என்னும் அற்புதக் கருவி ஒன்றே
ஏர்முனையாய் நின்றுதவும் இவ்விசை உழவருக்கு.

வாத்தியங்கள் வணங்கி நிற்கும் கைகூப்பி இவரை
காத்திருக்கும் இவர் கை தம் மீது படர
சாத்தியமே இல்லாத வியப்பிசை வடிவங்கள்
பாத்தியாய்ப் படரும் இவர் இசைத் தோட்டத்தில்.

என்றும் ஒரே நிலவுதான் உலவும் வானத்தில்
என்றும் இவர் புகழ்தான் நிலவும் வையத்தில்
அன்று புதுப் புதுப் பாடல் இவர் வழங்கக் காத்திருந்தோம்
இன்றும் அவை புதிதாய் ஒலிப்பதைப் பார்த்து வியந்தோம்.

அமுதம் உண்டோர்க்கு மரணம் இல்லையாம்
அமுதுக்காகப் போரிட்டனர் தேவரும் அசுரர்களும்
அமுதைத் தேடி நாம் அவ்வுலகம் போக வேண்டாம்
அமுதாய் இவர் இசையை நாளும் நாம் பருகும்போது.

நன்றி மறவாத இசை ரசிகர் கூட்டம்
என்றும் இவர் புகழைப் பாடிப் போற்றும்
அன்று நமக்கு இசையை அமுதாய் இவர் வழங்கிய நன்மை
என்றும் இசை பாட இவர் வாழ்வார் உண்மை.

பாட வைத்தார் இவர் நம்மை மெய்ம் மறந்து
ஆட வைத்தார் அனைவரையும் இவர் இசையின் மயக்கத்தில்
தேட வைத்தார் நம்மை இவர் இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து
போட வைத்தார் புதிய இசை அகராதிகளை வியந்து.

ஏன் இந்த இணைய தளம்?

பாடலுக்கு இசை அமைப்பார் இவர் கண்ணிமைக்கும் நேரத்தில்
ஆடலுக்கும் அழகு சேர்ப்பார் தம் இசை வண்ணத்தால்
பாடிக் களிக்கவும் இவர் இசையின் பொருள் தேடிக் குவிக்கவும்
கூடியிருக்கிறோம் நாம் இவ்விணைய தளத்தில்.

மெல்லிசை மன்னரை இதயத்தில் வைத்தோம்
நல்லிசையை வைத்தோம் நம் உயிரில்
சொல்ல நினைத்ததை எழுத்தில் வைத்தோம்
நல்ல தமிழிலும் வல்ல ஆங்கிலத்திலும்.

சொல்லாத சொல்லுக்கு விலை இல்லை என்றார் கவிஞர்
பொல்லாத இவ்வுலகில் விலையின்றி இல்லை எதுவும் - பொருள்
இல்லாத மனிதருக்கும் கைகூடும் இசைச் செல்வம்
நல்லோர் எவரும் இணையலாம் தடையின்றி நம் இணைய தளத்தில்.

இணைய தளம் பல உண்டு இவ்வைய வலை உலகில்
இணை ஏதும் உண்டோ நம் இணைய  தளத்துக்கு?
அணையா விளக்காய் ஓளிரும் இவர் இசை ஜ்வாலைக்கு என்றும்
துணையாய் நிற்கும் தூபச் சுடர் நமது தளம்



வெள்ளி, 8 ஜூன், 2018

42 முதலிரவில் சுய முன்னேற்ற வகுப்பு!

இரண்டு பெண்கள் தங்கள் முதலிரவில் கணவனுக்கு சுயமுன்னேற்ற வகுப்பு எடுத்திருக்கிறார்கள் (திரைப்படத்தில்தான்)!

ஒருத்தி கிராமத்துப் பெண். படிப்பறிவு இல்லாதவள். அனாதையாக வளர்ந்தவள். அவள் கணவன் விபத்தில் ஒரு கை ஊனமடைந்தவன். தன் அன்னை அவளுக்கு அடைக்கலம் கொடுத்தாள் என்ற நன்றிக்காகவே தன்னை அவள் திருமணம் செய்து கொண்டாளோ என்று நினைக்கும் அவள் கணவன், கை ஊனமான தான் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க முடியுமா என்று நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்திருக்கும்போது  அவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அவள் பாடுகிறாள்.

படிக்காத கிராமத்துப் பெண் என்பதால் எளிய உதாரணங்களைச் சொல்லி அவனுக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்.

பல்லவி
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

'உன் மீது பரிதாபப்பட்டு நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. நீ தங்கமானவன் (உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவன்) என்பதால்தான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன்' என்பதை அவனைத் தங்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் வெளிப்படுத்துகிறாள்.

உன் உடல் ஊனம் நீ என் மீது அன்பு செலுத்தத் தடையாக இருக்கப் போவதில்லையே!  (உன்னிடம் நான் எதிர்பார்ப்பது உன் அன்பு ஒன்றைத்தான் என்பதைத் தெளிவு படுத்துகிறாள்.)

சரணம் 1
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?

சிங்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அவனுடைய வீரத்தையும், பலத்தையும் அவனுக்கு நினைவு படுத்துகிறாள்.  சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் சொல்வது போல் எண்ணங்கள் சிறப்பாக இருந்தால் செயல்களும் சிறப்பாக இருக்கும் என்ற செய்தியையும் சொல்கிறாள்.

சரணம் 2
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா?
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா?

இது முதல் இரவு என்பதை அவனுக்கு நினைவூட்டும் வகையில் இந்த வரிகள் அமைந்திருக்கின்றன. உடல் ஊனம் காதலுக்குத் தடையாக இருக்காது என்பதை உணர்த்துகிறாள்.

சரணம் 3
காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன்
உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர்
வாழ்வின் சுவை கூறுவேன்.

எல்லாம் சரிதான். ஆனால் காலம் (விதி) நமக்குச் சாதகமாக இல்லாவிட்டால் என்ன செய்வது? அப்படி நேர்ந்தால், ஒரு மனைவியாக உனக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டு ஒரு நல்ல மனைவியாக இருப்பேன். எந்த நிலையிலும் மானத்தோடு வாழ்ந்து ஒரு நல்ல குலப் பெண்மணியாக வாழ்வேன்.

இங்கே பண்பாட்டுப்படி வாழும் ஒரு மனைவியாகப் பேசுகிறாள்.

இன்னொரு விதத்தில் பார்த்தால், முதல் இரண்டு சரணங்களில் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியவள், மூன்றாவது சரணத்தில் தான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறாள்.

பாடலின் சுருக்கம் இது:

பல்லவி: நீ தங்கமானவன் அல்லவா!

சரணம் 1: நீ ஒரு பலம் பொருந்திய ஆண்மகன்

சரணம் 2: ஒரு காதலனாக (கணவனாக) நடந்து கொள்

சரணம் 3: ஒரு மனைவியின் கடமை எது என்பதை நான் அறிவேன். அதை நிறைவேறுவேன்.

எத்தனை அழகாக, பொருத்தமாக பாடலை அமைத்திருக்கிறார் கவிஞர்!

1959ஆம் ஆண்டு பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் வெளியான 'பாகப் பிரிவினை ' படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடலுக்கு இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி.

பாடல் வரிகளின் எளிமைக்கு ஏற்ப இசையும் எளிமையாக அமைந்திருக்கிறது. எளிமை என்றால் அலங்காரங்கள் அதிகம் இல்லாத, இனிமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மிகக் குறைந்த இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி அமைக்கப்பட்ட  மென்மையான இசை. அடக்கமான பட்டிக்காட்டுப் பெண்ணைப் போல் இசையும் அடக்கமாக வந்து நம்மை ஆட்கொள்கிறது.

சிறுவயதிலேயே என்னை மிகவும் ஈர்த்த ஒரு பாடல் இது. 'டிண்ட்டி டிண்ட்டின்' என்ற ஆரம்ப இசையைக் கேட்டதுமே மனம் ஒரு அற்புதமான சுக உணர்வை அனுபவிக்கத் தயாராகி விடும்.

பாடல் இதோ:

..
ன்னொரு பெண் ஒரு அரசனை மணந்தவன். அவளும் அரச குலத்தைச் சேர்ந்தவள்தான். அவள் கணவன் ஒரு வீரன். கொடை வள்ளல். ஆயினும் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்று கருதப்பட்டு அதனால் பல அவமானங்களைச் சந்தித்தவன்.

இந்தப் பெண்ணும் தன் கணவனுக்கு நம்பிக்கையூட்டும் வரிகளைப்  பாடுகிறாள்.

ஆனால் இங்கு கணவன், மனைவி இருவருமே அறிவிலும், கல்வியிலும் சிறந்தவர்கள் என்பதால், இங்கே மனைவியின் 'உரை' சற்று உயர் நிலையில் இருக்கிறது. உதாரணங்கள், தத்துவங்கள் எல்லாமே அறிவு சார்ந்தும், ஆழமாகவும் உள்ளன.

பாடல் வரிகளைப் பார்ப்போம்:

பல்லவி 
கண்ணுக்குக் குலமேது, கண்ணா!
கருணைக்கு இனமேது?
விண்ணுக்குள் பிரிவேது, கண்ணா!
விளக்குக்கு இருளேது?

சரணம் 1
பாலினில் இருந்தே நெய் பிறக்கும், கண்ணா!
பரம் பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் - அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்?

சரணம் 2
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே!

'தருமத்தின் தாயே கலங்காதே!' என்ற கடைசி வரி சுவாரசியமானது. இதற்குப் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம்.
1) கர்ணனை 'தர்மத்தின் தாயே!' என்று விளித்து 'நீ' கலங்காதே' என்று சொல்வதாகப் பொருள் கொள்ளலாம். ('தர்மத்தின் தாய்' கடவுள் போன்றவர் என்பதால், ஆணான கர்ணனை இப்படி விளிப்பதில் தவறில்லை.

2) கர்ணன் சோர்வுற்றிருப்பதைக் கண்டு தர்மத்தின் தாய் (அறக்கடவுள்) கலக்கமுற்றிருக்கிறாள். அதனால் அறக்கடவுளிடம், "தர்மத்தின் தாயே! கர்ணனின் சோர்வை நான் போக்கி விட்டேன். நீ இனிமேல் கலங்க வேண்டாம்" என்று சொல்கிறாள் என்று பொருள் கொள்ளலாம்.

3) தமிழில் தர்மம் செய்வது என்பது கொடையைக் குறிக்கும். எனவே தர்மத்தின் தாய் என்பவள்  'கொடைக்கான கடவுள்' என்று கொண்டால், "கொடையின் கடவுளே! கர்ணன் சோர்வுற்று விட்டதால் அவனுடைய கொடை நின்று விடுமோ என்று நீ கலங்க வேண்டாம். நான் அவனுடைய சோர்வைப் போக்கி விட்டேன். அவன் எப்போதும் போல் தர்மம் செய்து கொண்டுதான் இருப்பான்" என்று சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.

1964ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ணன்' படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கும் இசை விஸ்வநாதன்-ராமமூர்த்திதான்.

அரசனின் முதல் இரவு என்பதாலும், கவிஞரின் கம்பீரமான, உயர்ந்த சிந்தனைகளைத் தாங்கிய ஆழமான வரிகளுக்கு ஏற்பவும்,  இசையமைப்பு ராஜகம்பீரத்துடன் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் richness என்று சொல்லலாம். 'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்' பாடலில் இருந்த எளிமையான அழகுக்கு மாறுபட்ட அலங்காரம் செறிந்த அழகு!

அற்புதமான டியூன், அழுத்தமான சங்கதிகள் (வார்த்தைக்கு வார்த்தை சங்கதி!) காயப்பட்ட மனத்தை வருடிக் கொடுப்பது போன்ற ஹம்மிங், பிரமிக்க வைக்கும் பின்னணி இசை என்று மட்டும்தான் என் போன்ற பாமரனால் இந்தப் பாடலின் இசையை வர்ணிக்க முடியும். இசைக்குழுக்களால் பெரும்பாலும் இந்தப் பாடலின் பின்னணி இசையைப் பாதி அளவுக்கு கூட வாசிக்க முடிவதில்லை என்பதே இந்தப் பின்னணி இசையின் நுணுக்கமான அமைப்புக்குச் சான்று.

ஆறுதல் சொல்வது போல் அமைந்த பாடல் மெதுவான கதியில் செல்கிறது (slow pace).பின்னணி இசை வேகமான கதியில் துள்ளிக் குதித்து ஓடுகிறது - சோர்வடைந்த மனத்துக்கு உற்சாகமூட்டுவது போல். இது போன்ற வேறுபாடுகள் (contrasts) எம் எஸ் வி பார்த்துப் பார்த்துச் (consciously) செய்கிற விஷயங்கள் என்பது அவரது வேறு சில பாடல்களிலும்   நிரூபணமாகியிருக்கிறது.

பாடல் இதோ:


நன்றி!


.

ஞாயிறு, 20 மே, 2018

41. நான் வாழ்க!

கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் முதலிரவுப் பாடல்கள் எத்தனையோ உண்டு.  ஒவ்வொரு பாடலிலும் புதிதாக எதைச் சொல்வது என்பது கவிஞருக்கு ஒரு சவால்தான்.

1965ஆம் ஆண்டு வெளியான 'ஆனந்தி' படத்தில் இடம் பெற்ற 'உன்னை அடைந்த மனம் வாழ்க' என்ற பாடலில் கவிஞர் ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை எனினும், பாடல் வரிகளின் பொருளைக் கொண்டு இது ஒரு முதலிரவுப் பாடல் என்று தீர்மானிக்கலாம்.

இங்கே நாயகி முதலில் தன்னை வாழ்த்திப் பாடுகிறாள். தனது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திக் கொள்கிறாள். பிறகு கணவனிடம் சில கோரிக்கைகளை வைக்கிறாள். (In fact she makes quite a few  demands of her husband)

பல்லவி
உன்னை அடைந்த மனம் வாழ்க - இனி
ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் உன் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க!

'உன்னை அடைந்த மனம் வாழ்க' - அதாவது என் மனம் வாழ்க அல்லது நான் வாழ்க! ஒருவர் தன்னைத் தானே வாழ்த்திப் பாடிக் கொள்கிற பாட்டு இது ஒன்றாகத்தான் இருக்கும்! 'உன்னை' என்று ஆரம்பித்து இன்னொருவரை (கணவனை) வாழ்த்துவது போல் போக்குக்காட்டி, எவ்வளவு சாமர்த்தியமாகத் தன்னையே  வாழ்த்திக் கொள்கிறாள்!

'இனி ஒவ்வொரு இரவும் வாழ்க' -  ஒரு நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருந்தோமா  இல்லையா என்ற சிந்தனை அன்று இரவுதானே  நமக்கு வரும்? ஒவ்வொரு இரவும் வாழ்க என்று இரவை வாழ்த்துவது போல், ஒவ்வொரு நாளும் தன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மீண்டும் தன்னை வாழ்த்திக் கொள்கிறாள் இந்த நாயகி.

சரணம் 1
சிறு  மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னைத் தஞ்சம் என்று வந்தாள்  உன்னுடன் மகிழ,
நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா காத்தருள் புரிக
தினம் உன்னால் என் சுகம் வளர்க
இனி என்னால் உன் நிலை உயர்க

சரணத்தில் கவிஞர் அடுக்கடுக்காக வார்த்தைகளை அள்ளி வீச, மெல்லிசை மன்னர் சளைக்காமல் அனாயசமாக அத்தனை வார்த்தைகளையும் தன் ட்யூனுக்குள் அடக்கியிருக்கிறார். சுசீலாவுக்குத்தான் சற்று அதிகம் பயிற்சி தேவையாயிருந்திருக்கும்!

பொருள்:
நான் உன்னைத் தஞ்சம் என்று வந்திருக்கிறேன்
அஞ்சி அஞ்சி நடக்கும் என் நெஞ்சில் வஞ்சம் இல்லை
உன்னால் நான் சுகமடைய வேண்டும் (என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது உன் பொறுப்பு!)
நான் வந்து விட்டேன் இல்லையா? இனிமேல் உனக்கு யோகம்தான்!

சரணம் 2
எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று
தந்தார் தன் மனம் கனிய
இந்தப் பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம்
தன்னால் காத்தருள் புரிக
குறை இல்லாத வாழ்வொன்று அருள்க
துணை என்னோடு நீ கொள்ள வருக

பொருள்:
என் அப்பா ஒரு குழந்தையை ஒப்படைப்பது போல் என்னை உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்.
ஆனால் உன் அம்மாவை எப்படிப் பார்த்துக் கொள்வாயோ, அப்படி நீ என்னைப்  பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீ எனக்கு எந்தக் குறையையும் வைக்கக் கூடாது.

கடைசி வரி 'துணை என்னோடு நீ கொள்ள வருக' என்று இருக்கிறது. 'நான் மேலே சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு என்னை உன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்' என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

'துணை என்னோடு நீ கொள்ள வருக' என்பதற்கு 'நம் முதலிரவைத் துவங்கலாம்' என்று நாசூக்காகச் சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்!

இரண்டாவது சரணத்தின் இறுதியில் வரும் ஹம்மிங் நாயகி தன் முழுத்  திருப்தியை வெளிப்படுத்தும் ஒரு ஹம்மிங். பற்பல பாடல்களில், உணர்ச்சிகளுக்கும், கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் ஏற்ப  ஹம்மிங்கில்தான் மெல்லிசை மன்னர் எத்தனை வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார்!

அற்புதமான கவிதை வரிகளுக்கு அலாதியான ஒரு இனிமையுடன் கூடிய வித்தியாசமான டியூனில் அமைக்கப்பட்டுள்ள இசை!

அதிகம் கேட்கப்படாத  இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எனக்கு மனதில் ஒரு அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். அதுவும் அந்த ஹம்மிங்கைக் கேட்டால் எனக்கே வாழ்க்கையில் முழுத் திருப்தி ஏற்பட்டு விட்டது போன்ற மனநிலை ஏற்படும்.

கவிஞர், மெல்லிசை மன்னர் என்ற இரண்டு சித்தர்கள் சேர்ந்து உருவாக்கிய அபூர்வமான பாடல் இது.

இந்தப் பாடல் பற்றிய என் காணொளி;



வெள்ளி, 30 மார்ச், 2018

40. லொள் லொள் லொள் லொள்

மாடர்ன் தியேட்டர்ஸ் தரிப்பான 'பாசவலை'  (1956ஆம் ஆண்டு வெளியானது) படத்துக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சில பாடல்கள் எழுதினார். இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி 

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி .ஆர். சுந்தரம் (டி ஆர் எஸ்) கண்டிப்புக்குப் பெயர் போனவர். அவர் அறையில் அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலி மட்டும்தான் இருக்கும். அவர் அறைக்கு யார் வந்தாலும் நின்று கொண்டேதான் பேச வேண்டும்!

பட்டுக்கோட்டையார் கம்யூனிஸத்தில் ஈடுபாடு கொண்டவர்.  'கல்யாண பரிசு' படத்தில் வரும் 'வாடிக்கை மறந்ததும் ஏனோ?' என்ற காதல் டூயட்டில் கூட,

பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ?

என்று 'புரட்சி' என்ற சொல்லை வைத்திருப்பார். 

அவருக்கு சுயமரியாதை அதிகம் உண்டு.

ஒருமுறை டி ஆர் எஸ் அவரைக் கூப்பிட்டு ஒரு பாடல் எழுதுவதைப்பற்றிப் பேசினார். சிறிது நேரத்தில் பட்டுக்கோட்டையார் டி ஆர் எஸ்ஸின் அறைக்குள் வந்து அவரிடம் ஒரு தாளை நீட்டினார். 'அதற்குள்ளாகவா பாட்டு எழுதி விட்டார்?' என்று வியந்தபடியே தாளைப் பிரித்துப் பார்த்தார் டி ஆர் எஸ். அதில் 'மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவும்' என்று எழுதியிருந்தது. அதற்குப் பிறகு டி ஆர் எஸ்  தம் அறைக்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை உட்காரச் சொன்னார் .

இந்தப் படத்துக்காக

'என் கண்ணைக் கேளு சொல்லும்
அதில் காதல் மீன்கள் துள்ளும்'

என்று பட்டுக்கோட்டையார் ஒரு பாட்டு எழுதியிருந்தார். அதற்கு இசை அமைக்கப்பட்டு ஜிக்கியின் குரலில் பாடல் பதிவு செய்யபட்டது. 

பாட்டைக் கேட்ட டி ஆர் எஸ், 'இந்தப் பாட்டைப் பாடுபவர் ஒரு புதுமுகம். எனவே பாடல் வரிகள் இலக்கியத் தரமாக இல்லாமல், எளிமையாக இருக்க வேண்டும்' என்றார்.

தான் ஒரு நல்ல பாடல் எழுதியும் அது ஏற்றுக் கொள்ளப்படாததால் பட்டுக்கோட்டை மனம் நொந்து விட்டார். வேறொரு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவு செய்து படத்திலிருந்து விலகி விடத் தீர்மானித்தார்.

அப்போது இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன், "ஏதாவது எளிமையா எழுதுங்க.. மச்சான் ஒன்னைப் பாத்து மயங்கிப்போனேன் நேத்து' என்கிற மாதிரி" என்று யோசனை சொன்னார். ( இது போல் பல பாடல்களுக்கு எம் எஸ் வி மனம் போன போக்கில் சொன்ன வரிகள் கண்ணதாசன் வாலி போன்றோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன!)

'இதையே முதல் வரியாக வைத்துக் கொள்கிறேன்' என்று சொன்ன பட்டுக்கோட்டையார் பாட்டை எழுதி முடித்தார். இசை அமைக்கும்போது,எம் எஸ் வி  'லொள் லொள் லொள் லொள்' என்ற வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்டார். பாடல் ஹிட் ஆகி விட்டது. அத்துடன் இந்தப் பாடலுக்கு நடித்த புதுமுக நடிகை ராஜாமணி 'லொள் லொள் ராஜாமணி' என்று அழைக்கப்பட்டார்! 

இந்த நிகழ்ச்சியை மெகா டிவியில் ஒளிபரப்பப்பட்டஎன்றும்  எம் எஸ் வி நிகழ்ச்சியிலும், வேறு சில நிகழ்ச்சிகளிலும் எம் எஸ் வியே  விவரித்திருக்கிறார். 

கீழே உள்ள இந்தப் பாடலின் காணொளியில் எம் எஸ் வி இந்த நிகழ்ச்சியை விவரிப்பதைக் கேட்கலாம்.

'பாசவலை' படம் பற்றி ஹிந்து பத்திரிகையில் 14-06-2012 அன்று ராண்டார் கை அவர்கள் எழுதியுள்ள கட்டுரையிலும் இந்தப் பாடல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ( டி ஆர் எஸ் விரும்பியபடி பாட்டு எழுத விரும்பாமல் பட்டுக்கோட்டையார் படத்திலிருந்து விலகி விட்டதாகவும், டி ஆர் எஸ் அடியாட்களை அனுப்பி, பட்டுக்கோட்டையாரை அழைத்து வர வைத்ததாகவும் இந்தக் கட்டுரையில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது!)

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/paasavalai-1956/article3564081.ece

திங்கள், 5 மார்ச், 2018

39. 'குடிகாரன்' பேச்சு!

பழைய தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் ஒரே பாடல் இரண்டு முறை வெவ்வேறு காட்சிகளில் ஒலிக்கும். ஒன்று மகிழ்ச்சி, இன்னொன்று சோகம் அல்லது ஒன்று நாயகி நாயகனைச் சீண்டும் விதத்தில் பாடுவது இன்னொன்று நாயகன் நாயகிக்கு பதிலடி கொடுப்பது (ஆணாதிக்கம் மிகுந்த (திரை)உலகில் ஆண் பெண்ணைச் சீண்டுவது, பெண் அதற்குப் பதிலடி  கொடுப்பது என்ற நடைமுறைக்கு இடமில்லை!) என்பவையாக இந்த இரண்டு பாடல் காட்சிகளும் (பெரும்பாலும்) இருக்கும். காட்சிகள் வேறுபடுவதால் பாடல் வரிகள் வேறுபடும். டியூன் அதேபோன்று இருந்தாலும் இசையமைப்பும் மாறுபடும்.

இரண்டு விதமாய் ஒலிக்கும் இத்தகைய பாடல்கள்' மெல்லிசை மன்னரின் (மன்னர்களின்) இசையில்தான் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. ஏ எம் ராஜாவின் இசையில் 'உன்னைக்கண்டு நானாட,' 'காதலிலே தோல்வியுற்றான்,' 'எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே,' தனிமையிலே இனிமை காண முடியுமா,' ஆர் சுதர்சனத்தின் இசையில் 'ஏமாறச் சொன்னது நானோ,' இளையராஜாவின் இசையில் 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்,'  'வெள்ளைப்புறா ஒன்று,' 'என்னைப் பாடச்  சொல்லாதே,' போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான்  இத்தகைய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.  ஆனால் மெல்லிசை மன்னரின் இசையில் 1959ஆம் ஆண்டு வெளியான தங்கப்பதுமை  படத்தில் வரும் 'என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்' பாடலில் தொடங்கி, 1989இல் வெளியான நீதிக்கு தண்டனை படத்தில் இடம் பெற்ற 'சின்னஞ்சிறு கிளியே பாடல் வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட இந்த வகைப் பாடல்கள்' இருக்கின்றன. இத்தகைய பாடல்களின் இரு வடிவங்களில் அவர் கையாண்டிருக்கும் வித்தியாசமான இசை அணுகுமுறை சுவாரசியமானது.

1964ஆம் ஆண்டு வெளியான 'பணக்கார குடும்பம்' படத்தில் இடம் பெற்றிருக்கும் 'அத்தை மகள்  ரத்தினத்தை' பாடலை எடுத்துக் கொள்வோம்.

முதலில் நாயகி (சரோஜாதேவி) நாயகனை ( எம் ஜி ஆரை)ச்  சீண்டுவது போல் பாடுகிறார். கண்ணதாசன் பாடல் வரிகளை அனாயாசமாக எழுதி இருக்கிறார். பாடலின் ஒவ்வொரு வரியும் ஒரு கேள்வியாக அமைந்திருக்கிறது.

அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா?
அன்னநடை சின்னஇடை எல்லாம் வெறுத்தாரா?

முத்து முத்துப் பேச்சு கத்திவிழி வீ ச்சு அத்தனையும் மறந்தாரா?
முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா?*
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையைக் கெடுப்பாரா?
மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா?

கொட்டுமுழக்கோடு கட்டழகு மேனி தொட்டு விட  மனமில்லையா?
கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்குப்பாதி கருணை வரவில்லையா?
விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா?
மேடைதனில் நின்று தோழர்களைக் கண்டு சொல்லாமல் வருவேனா?

* இந்த வரியைப் புரிந்து கொள்ள கோனார் உரை தேவைப்படலாம்!. 'கண்ணுக்கு எதிரே இருக்கும் நாயகனை ரசிக்காமல் முன்னழகு இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குகிறது. நாயகிக்கு முன்னே நிற்கும் நாயகனைப் பார்க்க முடியவில்லையே என்று பின்னழகு ஏங்குகிறது' என்று நான் பொருள் கொள்கிறேன்!

சரியான இடங்களில் வார்த்தைகளை நிறுத்தி எம் எஸ் வி போட்டிருக்கும் டியூன் தேனைப் போன்ற இனிமை கொண்டது. அவர் போட்டிருக்கும் நூற்றுக்கணக்கான 'ஹம்மிங்'களில், சீண்டலை வெளிப்படுத்தும்  இந்த 'ஒஹோ ஒஹோ ஒஹோ' ஒரு தனி ரகம். (இன்னொரு சீண்டல் பாடலான 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ'வில் வரும் 'அஹஹஹா அஹஹஹா அஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா'வுடன் இதை ஒப்பிடலாம்.)

'பப்பப்பப்பப்பப்பப்பப்பப் பபபபபபா' என்று வரும் இடையிசை எம்ஜிஆரை மட்டும் இன்றி பாட்டைக் கேட்கும்  நம்மையும்  இழுத்துப் பிடிக்கிறது' அதற்குப் பிறகு வரும் டுடுடூ டுடுடூ என்ற இசையில் ஒரு சீண்டல் தொனி ஒலிக்கிறது. 'முத்து முத்துப் பேச்சு......' என்ற வரிக்குத் தான் போட்டிருக்கும் டியூனை ரசித்த மெல்லிசை மன்னர் அதை மீண்டும் வாத்தியத்தில் ஒலிக்கச் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

சரணத்தில் ஒவ்வொரு வரியிலும் டியூனில் மாறுபாடு தெரிகிறது. முதல் சரணத்தில் வரும் மூன்றாவது அடியான 'முத்திரையைப் போட்டு...' என்ற வரி மற்ற மூன்று வரிகளை விடச் சற்று நீளமாக அமைந்திருப்பதால் அதை மடக்கி டியூன் அமைத்திருக்கிறார். ஆனால் இரண்டாவது சரணத்தின் மூன்றாவது அடியான 'விட்டுப் பிரிந்தாலும்..' என்ற வரி அதிக நீளத்தில் இல்லை. ஆயினும் இந்த வரியையும், முதல் சரணத்தில் வரும் மூன்றாம் அடியைப் போலவே அமைத்திருக்கிறார் மன்னர்!

சரோஜாதேவியின் நடன அசைவுகள்  மிக நளினம். சற்றும் விரசம் தொனிக்காமல் எழிலுடனும், கண்ணியத்துடனும் பாடல் வரிகளை அபிநயம் பிடித்துக் காட்டுவதில் 'அபிநய சரஸ்வதி'க்கு நிகர் எவரும் இல்லை என்பது என் கருத்து. 'அன்ன நடை,' 'சின்ன இடை,'  'முன்னழகு தூங்க,' 'முத்திரையைப் போட்டு' போன்ற வரிகளுக்கான அவரது அபிநயத்தை கவனியுங்கள்.

பாடலை இங்கே கண்டு, கேட்டு ரசிக்கலாம்.


இரண்டாவதாக வரும் பாடல் நாயகிக்கு நாயகன் பதிலடி கொடுக்கும் பாடல். காதல் தோல்வியால் விரக்தி அடைந்து குடித்தது போல் நடித்து நாயகியைக்  கலவரப்பட்ட வைக்கும் வகையில் நாயகன் பாடும் பாடல் இது.

குடிகாரன் பேச்சாக ஒலிக்கும் இந்தப் பாடலில் இப்படி ஒரு கவிநயமா? பிரமிக்க வைக்கிறார் கண்ணதாசன். ஏதோ கம்பராமாயணம் போன்ற ஒரு காவியத்தை எழுதுவது போல் இந்தப் பாடலைப் புனைந்திருக்கிறார் கண்ணதாசன்.

 அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறக்கவில்லை
அன்னநடை சின்ன இடை அழகை வெறுக்கவில்லை

சிட்டுவிழி வீசி சின்னமொழி பேசி சின்ன மயில் மறந்து விட்டாள்
செங்கறும்புச் சாறும் தென்னை இளநீரும் தந்த மயில் பறந்து விட்டாள்
வண்ணரதம் காண வந்திருந்த மன்னன் வானரதம்** தேடுகிறான்
பொன்னிருந்த மடியை பூவிருந்த கொடியை எண்ணி எண்ணி வாடுகிறான்

கன்னியரை எண்ணி என்ன சுகம் கண்டேன் காலத்தை அழைத்து விட்டேன்
காதல் மணமேடை நாடகத்தில் ஆடும் கோலத்தைக் களைத்து விட்டேன்.
அன்னை மீதாணை தந்தை மீதாணை என்னை நீ தீண்டாதே
அடுத்தொரு பிறவி எடுத்திங்கு வருவோம் அதுவரை தடுக்காதே

(**'வானரதம் தேடுகிறான்' என்ற வார்த்தைகளுக்கு காதல் தோல்வியால் மனமுடைந்து வானுலகம் செல்ல விரும்புகிறான்.' என்று பொருள் கொள்ளலாம். அல்லது குடித்து விட்டு போதையில் வானில் மிதப்பது போல் மிதக்க விரும்புகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.)

நாயகன் கிணற்றுக் கட்டையின் மீது நடப்பதும், அவன்  போதையில் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுவாரோ என்று நாயகி பதறுவதுமாக அமைந்திருக்கும் இந்தக் காட்சிதான் கே.விஸ்வநாத்தின் 'சலங்கை ஒலி படத்தில் கமல் குடிபோதையில் கிணற்றின் மீது நடந்தபடி 'தகிட தகிட தகிட தந்தானா' என்று பாடும் காட்சிக்கு முன்னோடியாக அமைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பாடல் துவங்கும்போதே எம் எஸ் வியின் இசையில் வாத்தியக்  கருவிகள் (குடிபோதையில்!) தள்ளாடுகின்றன. ஹம்மிங்கில் போதை தெரிவதில் வியப்பில்லை. ஆனால் ஹம்மிங்கைத் தொடர்ந்து வரும் சீட்டியில் (விசில்) கூட  போதை தெரிவது வியப்பளிக்கிறது. விசில் அடித்தவர் அநேகமாக 'நெஞ்சத்திலே நீ நேற்று வாந்தாய்' பாடலில் விசில் அடித்த எம் எஸ் ராஜு (மாண்டலின் ராஜு)வாக இருக்கலாம். எம் எஸ் வியே விசில் அடிப்பதில்  பெற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

போதையுடன் ஒலிக்கும் பல்லவிக்குப் பின் வரும் வேகமான இசை நாகேஷின் அற்புதமான நடனத்துக்கு உதவும் வகையில் பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டபோது சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். கிராமஃபோன் இசைத்தட்டில் இந்த வேகமான இசை இடம் பெறவில்லை என்று நினைவு. சில வினாடிகளே வந்தாலும் நாகேஷின் நடன அசைவுகள் வியக்க வைப்பவை.

பாடல் இதோ



ஒரு சாதாரணப் படக் காட்சிக்கான பாடலை ஒரு அற்புதமான கலைப்படைப்பாக மாற்றுவது கண்ணதாசனுக்கும் எம் எஸ் விக்கும் ஒரு பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது!

இந்த இரு பாடல்களும் எனக்கு அளிக்கும் போதையிலிருந்து என்னால் எளிதில் விடுபட முடிவதில்லை. விடுபட நான் விரும்பியதும் இல்லை!